×

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக் கூடாது: இந்திய கடற்படை சார்பாக வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என இந்திய கடற்படை சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15-லிருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். இந்த இரண்டு மாதத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 விசைப் படகுகள், 8 நாட்டுப் படகுகள் மொத்தம் 14 படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 122 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மேலும், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூலை 31 அன்று கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில் மலைச்சாமி (59) என்ற மீனவர் மூழ்கி உயிரிழந்தார். ராமச்சந்திரன் (64) என்ற மீனவர் கடலில் மாயமானார்.

இதுவரை இவரது நிலை தெரியவில்லை. இப்படி சர்வதேக கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையின் சார்பாக மீனவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ராமேஸ்வரம் வேர்கோட்டில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலைய கமாண்டர் விஜய்குமார் நார்வால், மீன்வளத்துறை இயக்குநர் பிரபாவதி, கூடுதல் இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி, சுங்கத்துறை எஸ்பி-யான மகேஷ் குமார் மீனா, ராமேஸ்வரம் டிஎஸ்பி-யான. உமா தேவி, நகராட்சி தலைவர் நாசர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீனவ பிரதிநிதிகளான போஸ், சகாயம், எமரிட், கார்ல் மார்க்ஸ் உள்பட ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இந்திய கடற்படை சார்பாக, ”ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள் சர்வதேக கடல் எல்லையில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. கடலுக்குட் செல்லும் மீனவர்கள் ஆதார் நகல், மீனவர் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

கடலுக்குச் செல்வதற்கான அனுமதி டோக்கனை கட்டாயம் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய மீனவ சங்க பிரதிநிதிகள், ”விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்து கொடுக்க வேண்டும், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு ஒரு நாள் (24 மணி நேரம்) அனுமதி சீட்டுக்குப் பதிலாக, தங்கு கடலுக்கான அனுமதிச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எல்லை தாண்டிச் செல்லாமல் இந்திய கடற் பரப்பிற்குள்ளேயே மீன் பிடிக்க ஏதுவாக இருக்கும்” என தெரிவித்தனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக் கூடாது: இந்திய கடற்படை சார்பாக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RAMESWARAM ,INDIAN SEA ,INDIAN NAVY ,Rameshwaram ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அச்சம் தரும் ரயில்வே குடியிருப்பு சீரமைக்க ஊழியர்கள் வலியுறுத்தல்