×

பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது: பாகிஸ்தானில் ராணுவம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபகாலமாக பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல் என பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினர் பதுங்கி இருப்பதாகவும், மிகப்பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாகவும் உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் ஜெஹ்லம் நகரில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த அல்-கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் அமீன் முகமது உல் ஹக் சாம் கான் (64) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமீன் முகமது ஏற்கனவே ஐநா.சபையின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாகவும் இவர் செயல்பட்டார். எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ராணுவத்தின் இந்த நடவடிக்கை முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

The post பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது: பாகிஸ்தானில் ராணுவம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Al-Qaida ,Finladen ,Pakistan ,Islamabad ,Al-Qaeda ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்...