×

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசிய வழக்கு: கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி, 2 பேர் பார்வையாளர்கள் மாடத்தின் பகுதியில் இருந்து, எம்பிக்கள் இருந்த பகுதிக்குள் திடீரென குதித்தனர். பின்னர் மஞ்சள் நிற புகைக்குண்டு வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்து, பாதுகாப்பு மீறல் வழக்கு டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும், கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசாரின் குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் காவலையும் அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி விசாரிக்க பட்டியலிட்டு உத்தரவிட்டார்.

The post நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசிய வழக்கு: கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Parliament House ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...