×

7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

புதுடெல்லி: 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகள் எம்எல்ஏக்கள் மரணம், ராஜினாமா மற்றும் பிற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. பதிவான வாக்குகள் 13ம் தேதி எண்ணப்படுகின்றது. மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரானாகட், தக்‌ஷின், பாக்டா மணிக்கட்லா சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில், இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை கொண்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நளகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் சுயேச்சை எம்எல்ஏக்கள் மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இந்த 3 பேரும் பாஜவில் இணைந்ததால் இங்கு பாஜ களமிறங்கியுள்ளது. 3 தொகுதிகளில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். டெஹ்ராவில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவி கமலேஷ் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்த நிலையில் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதல்வர் பகவந்த் மான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். இதேபோல் உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்க்ளார், பீகாரில் ரூபாவ்லி, தமிழ்நாட்டில் விக்ரவாண்டி, மத்தியப்பிரதேசத்தில் அமர்வாரா தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது.

The post 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Midterm elections ,New Delhi ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...