சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் நடந்த அதிரடி வேட்டையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதை பொருட்களுக்கு எதிராக பெருநகர காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் சென்னை முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, 1,184 போதை மாத்திரைகள், 8 கத்திகள், 7 சல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக தண்டையார்பேட்டை காவல் எல்லையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கார்கில் நகரை சேர்ந்த கார்த்திக் (எ) புறா கார்த்திக் (25), வள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் கரீம் (25), செங்குன்றம் கோமதி அம்மன் நகரை சேர்ந்த ஜோசப் (எ) தினேஷ் (27) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தி.நகர் நடேசன் பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த செங்குன்றம் ஆதாம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
The post 2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர் appeared first on Dinakaran.