×

முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பு கவனம்: உலகத்தரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அமைப்பு

* 4,984 கோடியில் 577 கி.மீ. வரை நான்கு வழி சாலைகள் மேம்பாடு
* ரூ.2,465 கோடியில் 1710 கி.மீ வரை இருவழி சாலைகளாக மாற்றம்
* குமரியில் திருவள்ளுவரையும், விவேகானந்தரையும் இணைக்கும் பாதசாரிகள் பாலம்

சென்னை: தமிழ்நாட்டின் சாலை வசதிகளை பெருக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதுடன், உலகத் தரத்திலான சாலைகளை அமைப்பதில் பல முன்னேற்றத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் ரூ.4,984 கோடி மதிப்பில் 577 கி.மீ. சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், ரூ.2465 கோடி மதிப்பில் 1710 கி.மீ. சாலைகள் இருவழிச்சாலைகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சாலை வசதிகளை பெருக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இதுகுறித்து விவரம் பின்வருமாறு:
* நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்துதல்
இதுவரை ரூ.4,984 கோடி மதிப்பில் 577 கி.மீ. சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்துவதற்கு எடுத்து கொள்ளப்பட்டு, ரூ.2,608 கோடி செலவில் 215 கி.மீ. நீள சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன.

* இருவழி சாலையாக அகலப்படுத்துதல்
ரூ.2465 கோடி மதிப்பில் 1710 கி.மீ. சாலைகள் இருவழிச்சாலைகளாக மாற்ற பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.1860 கோடி செலவில் 1407 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

* நகர்ப்புற சாலை மேம்பாட்டுப் பணி
கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 815 கோடி மதிப்பில் 171 கி.மீ. நீள சாலைப் பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.579 கோடி செலவில் 132 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

* தரைப்பாலங்களை உயர் பாலங்களாக மாற்றும் பணி
மானியக்கோரிக்கையில், 1281 தரைப்பாலங்களுக்கு பதிலாக, 2026ம் ஆண்டிற்குள் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என முதல்வரின் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்குவதால் போக்குவரத்து சில தடங்களில் பாதிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட நடவடிக்கைகள், சரக்குப் போக்குவரத்து, விளை பொருள்களை சந்தைப்படுத்துதல், மாணவர்கள் பள்ளி செல்வது போன்றவற்றில் உள்ள இடையூறுகளை தடுக்க கடந்த 3 ஆண்டுகளாக, இத்திட்டத்தின் கீழ், ரூ.2,006 கோடி மதிப்பில் 1113 தரைப்பாலங்கள் எடுக்கப்பட்டு, ரூ.785 கோடி செலவில் 795 உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் இருக்கின்றன.

* சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டம்
சீரான போக்குவரத்தை மேம்படுத்த மற்றும் சாலையின் மேற்பரப்பு வலுவுடன் இருக்க, கடந்த 3 ஆண்டுகளாக, இத்திட்டத்தின் கீழ், ரூ. 1,610 கோடி மதிப்பில் 4581 கி.மீ. நீளத்திற்கு பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.1,353 கோடி செலவில் 4492 கி.மீ. நீள சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

* சாலைப் பாதுகாப்பு
இந்த திட்டத்தின் கீழ், ரூ.676 கோடி மதிப்பில் 1653 பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.352 கோடி செலவில் 1,130 சாலை பாதுகாப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

* புறவழிச்சாலைகள் அமைத்தல்
புறவழிச்சாலைகள், போக்குவரத்துகள் தங்கு தடையில்லாமல் செல்வதை உறுதி செய்வதுடன் நகர்ப்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பயன்படுகின்றன. மேலும், வாகன இயக்க செலவைக் குறைக்கவும் பயண நேரத்தை வெகுவாக குறைக்கவும் புறவழிச்சாலைகள் பயன்படுகின்றன. அந்தவகையில், கடந்த 3 ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன. அவற்றில், 18 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், அம்பாசமுத்திரம் – நெல்லை மாவட்டம், அரக்கோணம்- ராணிப்பேட்டை மாவட்டம், அருப்புக்கோட்டை மேற்கு புறவழிச்சாலை- விருதுநகர் மாவட்டம், பவானி (பாகம்-I) ஈரோடு மாவட்டம் முதலிய 21 புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 27 பணிகளுக்கு நில எடுப்பு நிலையிலும், 38 பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலும் உள்ளன.

* உயர்மட்ட சாலை மேம்பாலம்
சென்னை அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல்களால் நிலவும் காலதாமதங்களை தவிர்க்கவும், சீரான போக்குவரத்துகள் நடைபெறவும் உதவும் வகையில் ரூ.621 கோடி செலவில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

* சாலை மேம்பாலம்
நீண்ட காலம் நிலுவையில் இருந்த மதுரை மக்களின் கோரிக்கையான மதுரை மாநகரில் ராஜாஜி அரசு மருத்துவமனை சந்திப்பு மற்றும் அப்போலோ மருத்துவமனை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி 2011-ல் தொடங்கி எவ்விதமான முன்னேற்றமின்றி இருந்தது. கடந்த 2023-24ம் ஆண்டு இந்த பணிகளுக்கான அரசாணை வழங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

* ரயில்வே மேம்பாலங்கள்
புதிய அரசு பொறுப்பேற்று பின், 70 ரயில்வே மேம்பால பணிகள் பல்வேறு நிலையில் நடைபெற்று வந்தன. இதுவரை ரூ.836 கோடியில் 22 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. மாநில நிதியின் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சிக்கண்னா கல்லூரி (திருப்பூர் மாவட்டம்) அருகே ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பன்னாட்டு நிதி உதவியுடன் நடைபெறும் திட்டங்களில் உள்ள சாலை மற்றும் புறவழிச்சாலைகளில் 12 ரயில்வே மேம்பாலங்களும் நடைபெற்று வருகின்றன. இவைதவிர அருப்புக்கோட்டை, சிவகங்கை, சங்கரன்கோவில், திண்டுக்கல் நாமக்கல் ஆகிய புறவழிச் சாலைப்பணிகளில் குறுக்கே ரயில்வே பாதையில் பாலம் கட்ட ரயில்வே துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* மரக்கன்றுகள் நடுதல்
கலைஞரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இதுவரை, 4.50 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. அதேபோல் 2.50 லட்சம் செடிகள் நடப்பட்டுள்ளன.

* நிரந்தர வெள்ள சீரமைப்பு, புயல் நிவாரண பணிகள்
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் வெள்ள நிரந்தர மறுசீரமைப்பின் கீழ், 14744 மீ வடிகால் பணி, 9 மதகுகள் மற்றும் 1,28,266 மீ நீளமுள்ள வண்டல் நீர்பிடிப்பு குழிகள் உட்பட 46 பணிகள் ரூ.106 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளன. இதில், 14,329 மீ வடிகால், 7 மதகுகள் மற்றும் 60,710 மீ நீளமுள்ள வண்டல் நீர்பிடிப்பு குழிகள் ரூ.49 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்புகழ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 13 பணிகள் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, சென்னையில் வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கில் முக்கியமான பணிகள் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழையால், வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் மற்றும் மதகுகள் சேதமடைந்தன. ஒரு வாரமாக மழைநீர் சில மீட்டர் உயரத்திற்கு தேங்கி நின்றதால் சாலைகள் மற்றும் பாலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தாமிரபரணி படுகையில் உள்ள பல பெரிய குளங்கள் உடைந்தன. போர்க்கால அடிப்படையில் இரவும் பகலும் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அயராத முயற்சியால், சாதனை நேரத்தில் போக்குவரத்து சீரானது. இதுதவிர, 2023-24ம் ஆண்டில், ரூ.185 கோடி செலவில் தற்காலிக சீரமைப்பு பணிகளும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ரூ.227 கோடி செலவில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், மதகுகள், சாலைகள், வடிகால், மையத்தடுப்பான் ஆகியவற்றை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* ஜல்லிகட்டு அரங்கம்
குட்டிமேய்க்கிபட்டி அதகரைப்பாலம் சாலையிலிருந்து (மாவட்ட இதரச் சாலை) ஜல்லிக்கட்டு அரங்கம் வரை 3.30 கி.மீ நீளத்திற்கு ஒருவழிப் பாதையில் இருந்து கடின புருவங்களுடன் கூடிய இருவழிப் பாதையாக மாற்றும் பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட்டு, இச்சாலை முதல்வரால் கடந்த ஜன.24 தேதி திறந்து வைக்கப்பட்டது.

* ஆறுகளின் குறுக்கே பாலங்கள்
மேலும், நீர் நிலைகள், குறிப்பாக ஆறுகளின் குறுக்கே கடந்த மூன்றாண்டுகளில் 277 உயர்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2023-24ம் ஆண்டில் 13 உயர்மட்ட பாலங்கள் ரூ.400 கோடி மதிப்பீட்டில் எடுத்து கொள்ளப்பட்டு பல்வேறு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. அந்தவகையில் இந்த பணிகளின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாடு முழுவதிலும் சாலை பயணம் இனிமையானதாக, எளிமையானதாக அமைய, பல்வேறு முன்னேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி சாலை வசதிகளில் தமிழ்நாடு முதலிடம் என்பதை நிலைநாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

* குமரி முனையில் பாதசாரிகள் பாலம்
முதல்வரின் கனவு திட்டங்களில் ஒன்றான குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடைந்து திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.

* நம்ம சாலை செயலி மூலம் புகார்களுக்கு தீர்வு
“பள்ளங்கள் அற்ற சாலை” என்ற இலக்கை எய்திடவும் பொது மக்களின் துணையோடு கண்டறியப்பட்ட சாலை பள்ளங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்திடவும் `நம்ம சாலை கைபேசி செயலி’ புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் சாலை பள்ளங்கள் சம்பந்தப்பட்ட களப்பொறியாளர்களுக்கு உடனுக்குடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அதன் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை சாலையில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும். மேலும் சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து புகார் தந்தவர்க்கு தெரிவிக்கப்படும். நம்ம சாலை செயலி மூலமாக இந்தியாவிலேயே முதன்முறையாக இச்செயலி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக முதல்வரின் “பள்ளமில்லா சாலை பாதுகாப்பான பயணம்” என்ற எண்ணம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மூலமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் 2,129 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பு கவனம்: உலகத்தரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tiruvalluvar ,Vivekananda ,Kumari Chennai ,Tamil Nadu ,M.K.Stal ,World-class highways Organization ,Dinakaran ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...