×

தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு: விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு

சென்னை: தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் மீதானவழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் சம்மனுக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் இரயில் நிலையத்தில் வழியாக சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக பணத்தை பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.மேலும் ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய மூன்று பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் சம்மன் மற்றும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பன்ட் தினேஷ் ,உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், விதிமுறைகளுக்கு புறம்பாக சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் எனவே சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்,வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

சிபிசிஐடி காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார்,உரிய சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பது அல்லது சம்மனை ரத்து செய்தால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும் எனவே தற்போது நிலையில் எந்த தடை உத்தரவும் முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும் மனுதாரர்கள் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு: விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tambaram railway station ,ICourt ,Nayanar Nagendran ,Chennai ,Chennai High Court ,BJP ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்...