×

உல்லாசத்துக்கு இடையூறு:காதலி மகனை அடித்துக் கொன்ற ‘இன்ஸ்டா’ காதலன்

திருப்பூர்: திருப்பூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த தாயின் காதலனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (28). இவருடைய மனைவி சுபா (26). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இவர்களுடைய 4 வயது மகன் பழனிவேல் ராஜன். தம்பதியர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் திவ்யா 4 வயது குழந்தையுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகர் பகுதியில் கணவன்-மனைவி எனக்கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். பார்த்தசாரதி, திவ்யா இருவருக்கும் உல்லாசமாக இருக்க குழந்தை இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் திவ்யாவின் 4 வயது குழந்தை பழனிவேல் ராஜனை பார்த்தசாரதி அடிக்கடி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இதேபோல கடந்த 26ம் தேதி பார்த்தசாரதி குழந்தையை தாக்கியுள்ளார்‌. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 4 வயது குழந்தை வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழனிவேல்ராஜன் சிகிச்சை பலனின்றி இறந்தான். பழனிவேல் ராஜனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இதுபற்றி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மங்கலம் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பார்த்தசாரதி குழந்தையை அடித்ததால் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த மங்கலம் போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உல்லாசத்துக்கு இடையூறு:காதலி மகனை அடித்துக் கொன்ற ‘இன்ஸ்டா’ காதலன் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Parthasarathy ,Natham ,Dindigul district ,Suba ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து