×

பள்ளி மாணவிகளை பாலியல் தள்ளிய வழக்கு: பிரபல பெண் ஏஜென்ட் போக்சோ சட்டத்தில் கைது


*நதியா மூலம் சிறுமிகளை ரூ2,500 கமிஷன் அடிப்படையில் பயன்படுத்தியது அம்பலம்
*தொடரும் அதிரடி நடவடிக்கையால் சிறுமிகளை பயன்படுத்தியோர் கலக்கம்

சென்னை: பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், கமிஷன் அடிப்படையில் மாணவிகளை பயன்படுத்திய செங்கல்பட்டு பிரபல பாலியல் பெண் ஏஜென்ட் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகள் மற்றும் பண உதவிகள் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தி.நகரை சேர்ந்த முக்கிய குற்றவாளியான நதியா (39), அவரது சகோதரி சுமதி (46), சுமதியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் (42), நேபாளம் நாட்டை சேர்ந்த மாய ஒலி (29) ஆகியோரை கடந்த 18ம் தேதி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாலியல் புரோக்கர் நதியா தனது மகள் மூலம் பள்ளியில் படிக்கும் சக மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்திய கோவை பீளமேடு எல்லை தோட்டம் சாலை 2வது தெருவை சேர்ந்த அசோக்குமார் (31), மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்த ரமணிதரன் (70), தி.நகரில் சர்வீஸ் குடியிருப்பு ேமலாளரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி (36) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நதியா வீட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் 5 செல்போன்களில் இருந்த 170க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளின் ஆபாச வீடியோக்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். என்ஐஏ அளித்த 170 பள்ளி மாணவிகளின் வீடியோகளை முழுமையாக ஆய்வு செய்து, அதில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கைது செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் விபச்சார தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். பாலியல் புரோக்கர் நதியா, பள்ளி மாணவிகளை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு கமிஷன் அடிப்படையில் அனுப்பியது தெரியவந்தது. அதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பிரபல பாலியல் ஏஜென்டான விஜயலட்சுமி (51) என்பவருக்கு பள்ளி மாணவிகளை ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.2,500 என்ற கமிஷன் அடிப்படையில் அனுப்பியுள்ளார்.

அதன்படி விஜயலட்சுமி ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள மறைமலைநகர் பகுதியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் படி இத்தகவல் உறுதியானது.இதைத்தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான இன்ஸ்பெக்டர் செல்வராணி குழுவினர் நேற்று அதிரடியாக செங்கல்பட்டு மாவட்ட பிரபல பாலியல் ஏஜென்டான விஜயலட்சுமியை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் சிறுமிகளை பாலியலுக்கு பயன்படுத்திய நபர்கள் மற்றும் ஏஜென்டுகளாக செயல்பட்ட நபர்கள் அடுத்தடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பள்ளி மாணவிகளை பாலியல் தள்ளிய வழக்கு: பிரபல பெண் ஏஜென்ட் போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Nathiya ,Chennai ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் பரனூர்...