×

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் காவலாளி, வேலைக்காரர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: தூத்துக்குடியில் மற்றொரு குழு முகாம்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக, அவரது உடல் கிடந்த தோட்ட காவலாளிகள் மற்றும் வீட்டு வேலையாட்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2ம்தேதி மாயமான நிலையில் 4ம்தேதி கரைச்சுத்துபுதூரில் அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வந்த நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 6 நாட்களாக சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி கள விசாரணை மற்றும் அலுவலக விசாரணை என இரு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்களான தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டவர்கள், ஜெயக்குமாரின் உறவினரான டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 32 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தினமும் 2 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.இதற்கிடையே ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்ட அவரது தோட்டத்தின் அருகே உள்ள ஜெபக்கூடத்தில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தங்கிச் சென்றவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ேநற்று சாட்சிகளிடம் விசாரணையை தொடங்கினர். ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்ட தோட்டத்தின் காவலாளிகள், அவரது வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள், கார் டிரைவர்கள் உள்ளிட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள், செல்போனில் அவர் அதிக நேரம் பேசியவர்களிடமும் விசாரணை நடத்தி அதனை வாக்குமூலமாக பதிவு செய்து வருகின்றனர். ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட 4ம்தேதி அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள ஜெயக்குமாரின் மாமனார் வீட்டில் தான் இருந்துள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் சிபிசிஐடியின் ஒரு குழுவினர் தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள ஜெயக்குமாரின் மாமனார் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் காவலாளி, வேலைக்காரர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: தூத்துக்குடியில் மற்றொரு குழு முகாம் appeared first on Dinakaran.

Tags : Nellie Congress ,Jeyakumar ,CBCID ,Thoothukudi ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Nellie East District Congress ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை