×

தமிழ்நாட்டில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: வாக்கு எண்ணும் பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்துடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 39 தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும்.

தமிழகத்தில், அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்காக 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். நுண் பார்வையாளர்களாக 4,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும் போதே, தபால் வாக்குகள் எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும். அதேநேரம், தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே, இறுதி சுற்று வாக்குப்பதிவு விவரங்கள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிக்கப்படும். இதுதவிர வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலமும் சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தமிழ்நாட்டில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Chennai ,Sathyaprada Sahu ,Vilavankode Assembly ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான...