×

மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக சாப்பிட்ட ஷவர்மா வாலிபர் உயிரை பறித்தது: 2 பேர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டிராம்பே நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாமேஷ் போக்சே (19). இவர், கடந்த 3ம் தேதி மாலை தெருவோர கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலையில் அவருக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்து விட்டு சிறிய அளவிலான வலி நிவாரணி மாத்திரை கொடுத்து, வீட்டிற்கு அனுப்பியுள்ளார் டாக்டர். அன்று முழுவதும் பிரதாமேஷ் எதுவும் சாப்பிடவில்லையாம்.

தொடர்ந்து, 5ம் தேதி காலையில் மீண்டும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே பின்னர் குடும்பத்தினர், அவரை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர் சிகிச்சை அளித்து அனுப்பியுள்ளார். மாலையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை மோசமடைந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், பிரதாமேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் 7ம் தேதி காலையில் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடைக்காரர்கள் ஆனந்த் காம்ப்ளே, முகமது அகமது ராசா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தவிர, ஷவர்மாவின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்டதால்தான் பிரதாமேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 304, 336, 273/34 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உணவுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என ேபாலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள ஒரு கடையில் கடந்த 3ம் தேதி உணவு சாப்பிட்ட 12 பேர் உடல் உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால்தான் பாதிப்பு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக சாப்பிட்ட ஷவர்மா வாலிபர் உயிரை பறித்தது: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Shawarma ,CHICKEN ,MUMBAI, MAHARASHTRA STATE ,PRADAMESH BOKSE ,MUMBAI TRAMBE NAGAR AREA ,MAHARASHTRA STATE ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...