வேலூர், மே 7: வேலூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 88 பேர் வரும் 10ம் தேதி செல்ல உள்ளனர். இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 19ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து 2வது கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் கடந்த 26ம் தேதியும், 3ம் கட்ட கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் இன்றும் நடக்கிறது. தொடர்ந்து 4ம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ம் தேதி நடக்க உள்ளது. அதில், ஆந்திரா மாநிலத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்கு தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆந்திரா மாநில போலீசார், துணை ராணுவ வீரர்கள், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையில் ஆந்திரா மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 உள்ளூர் போலீசார், 57 ஊர்க்காவல் படை வீரர்கள் செல்ல உள்ளனர். இவர்கள் வரும் 10ம் தேதி புறப்படுகிறார்கள். தேர்தல் முடித்துக் கொண்டு வரும் 14ம் தேதி கிளம்பி வேலூருக்கு வர உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆந்திராவுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 88 பேர் பயணம் வரும் 10ம் தேதி செல்கின்றனர் வேலூர் மாவட்டத்திலிருந்து appeared first on Dinakaran.