×

தமிழக வீரர் குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது :பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

டெல்லி: செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் டொரோண்டோ நகரில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடரில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார்.  இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. குகேஷின் செயல்பாடு கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக வீரர் குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது :பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : India ,Kukesh ,PM Narendra Modi ,Delhi ,Narendra Modi ,Chess Candidates series ,Candidates International Chess Series ,Toronto, Canada ,
× RELATED சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை...