மேட்டுப்பாளையம்: 10 ஆண்டு பாஜ ஆட்சியில் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என நடிகை கவுதமி பேசினார். நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகை கவுதமி நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜ தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. அப்படிப்பட்ட பாஜ தமிழகத்திற்கு தேவையில்லை. பாஜவை தோற்கடிக்க வேண்டும்.
நீலகிரி மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ளவும், கேட்பதற்கும், அதற்கு தீர்வுகாண பாஜவுக்கு நேரம் கிடைக்கவில்லையா? கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சராக எல்.முருகன் இருக்கிறார். இவர், நீலகிரி தொகுதியில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்பது தெரிந்தும் இத்தொகுதிக்கு ஏதாவது நல்ல திட்டங்களை இதுவரை செய்துள்ளாரா? கையில் ஆட்சி, எல்லா விதமான வசதி இருந்தும், மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தும் ஒன்றிய இணை அமைச்சர் நீலகிரி தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. எனவே அப்படி ஒரு வேட்பாளர் நமக்கு தேவை இல்லை. இவ்வாறு நடிகை கவுதமி பேசினார்.
The post 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத பாஜ: நடிகை கவுதமி பிரசாரம் appeared first on Dinakaran.