×

நீரிடை நின்ற நிமலன்

தெய்வங்கள் நீரின் நடுவிலுள்ள தீவில் தனிமாளி கையில் வீற்றிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. மகா கயிலாயத்தைச் சுற்றி பெரிய கடல்கள் இருப்பதாகச் சிவபுராணம் கூறுகிறது. விநாயகர் இட்சுசாகரம் எனும் கருப்பஞ் சாற்றுக் கடலின் மத்தியில் அமைந்துள்ள ஆனந்த பவனம் எனும் திருமாளிகையில் வீற்றிருப்பதாக விநாயக புராணம் கூறுகிறது. திருமால் பாற்கடலின் மத்தியில் பள்ளி கொண்டுள்ளார்.

இவ்வாறு அனேக தெய்வங்கள் நீரிடை வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டி நீர் நிலைகளின் நடுவே ஆலயங்களை அமைக்கும் வழக்கம் வந்தது. சில தலங்களில் குளத்திற்கு நடுவே ஆலயங்களை அமைத்துள்ளனர். திருவாரூரில் கமலாயத் திருக்குளத்தின் நடுவே பெரிய சிவாலயத்தில் பெருமான் நடுவணநாதர் எனும் பெயரில் வீற்றிருக்கக் காண்கிறோம். திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் நடுவே விநாயகர் ஆலயம் உள்ளது.
ஆற்றின் நடுவே அமைந்த திட்டுகளிலும், ஆறுகளுக்கிடையே மேட்டுப் பகுதிகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் காங்கேயன் பாளையத்தை ஒட்டி ஓடும் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பெரிய பாறையில் சிவாலயம் உள்ளது. அகத்தியர் வழிபட்டுப் பேறுபெற்ற இத்தலம் நட்டாற்றீசுரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பாலாறு கடலோடு கலக்குமிடத்திற்குச் சற்று முன்பாக உள்ள பரமேசுவரமங்கலத்தில் ஆற்றுக்கு நடுவே மணல் திட்டில் கயிலாயநாதர் ஆலயம் உள்ளது. வெள்ளம் பெருகிவரும் காலங்களில் கரையில் இருந்தபடியே பூசனை செய்கின்றனர். காவிரி ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமைந்தவூர் திருத்துருத்தி எனப்பட்டது. குத்தாலம் எனப்படும் அத்தலத்தில் பெருமான் ‘சொன்னவாறு அறிவார்’ எனும் பெயரில் உள்ளார். காவிரியின் கரையில் பூந்துருத்தி எனும் தலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள பாறையில் குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்கள் நீரின் நடுவில் கோயில்களை அமைத்து மகிழ்ந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் கடல்நீர் சுற்றித் தேங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. அந்த நீரில் நாகர்கள் வந்து வழிபடுவதைக் குறிக்கும் வகையில் சுற்றிலும் நாகர்களின் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன.

திருச்சியை அடுத்துள்ள திருப்பைஞ்சீலி எனும் தலத்தில் பல்லவர்கள் சிறுகுடைவரைக் கோயிலை அமைத்துள்ளனர். முத்து மலைத் தியாகர் வீற்றிருக்கும் இந்தச் சிற்றாலயத்தில் காவிரியில் வெள்ளம் வரும்போது சுற்றிலும் நீர் நிரம்பிவிடும். திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில்), திருப்புகலூர், ஆலங்குடி முதலிய அனேக தலங்களில் சிவாலயங்களைச் சுற்றி அகழியை அமைத்துள்ளனர். இப்போது அந்த அகழியின் சில பகுதிகளைத் தூர்த்து ஆலயத்திற்கு நிரந்தரமான வழியை அமைத்துள்ளனர்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post நீரிடை நின்ற நிமலன் appeared first on Dinakaran.

Tags : NIMALAN ,Shivapurana ,Maha Kaylayat ,Vinayagar ,Ananda Pawanam ,Itsusakaram ,
× RELATED நீரிடை நின்ற நிமலன்