×

இரைப்பை புற்றுநோய் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் நிபுணர் செந்தில்குமார் கணபதி

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்க்கு அடுத்து புற்றுநோய்தான் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்த நிலையில், தற்போது, நாம் அறிந்தவர், தெரிந்தவர், உறவினர் என்று அதிகரித்த நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்று கோடியை நெருங்கிவிடும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பரந்து கிடக்கும் உயிர்க்கொல்லிப் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் பற்றியோ, அவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறியும் முறைகள் பற்றியோ போதிய விழிப்புணர்வு இன்னும் நம்மிடையே இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

எனவே தான், மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4 – ம் தேதி புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இரைப்பை புற்றுநோய் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் செந்தில்குமார் கணபதி. இரைப்பை புற்றுநோய் நாம் சாப்பிடும் உணவானது வாயிலிருந்து உணவுக்குழாய் வழியாக சென்று இரைப்பையை அடைகிறது.

இரைப்பையில் உணவு வந்து சேர்ந்ததும் சிறுகுடல் அதனை செரிமானம் செய்ய வேண்டிய பணிகளை தொடங்குகிறது. உணவுக்குழாய்க்கும், சிறுகுடலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் நாம் வயிறு (இரைப்பை) என்கிறோம். இந்த இரைப்பையில் நான்கு மெல்லிய டியூப் போன்ற லேயர் இருக்கும். அதன் உட்பகுதியில் கட்டி ஏற்படும்போது அது நாளடைவில் வளர்ந்து இரைப்பை புற்றுநோயாக மாறுகிறது. இதை ஆரம்ப கட்டத்திலேயே கவனித்துவிட்டால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. அதுவே, அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி போகும்போது உயிருக்கே ஆபத்தாகவும் மாறலாம்.

யாருக்கெல்லாம் இரைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. எதனால் ஏற்படுகிறது.இரைப்பை புற்றுநோய் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கும் வாய்ப்புண்டு. உலகளவில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஜப்பானில்தான் இந்த இரைப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. அடுத்தபடியாக இந்தியாவிலும் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.

எதனால் இரைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது என்றால், வயிற்றுப்பகுதியில் ஏற்படும் எச்.பைலோரி என்ற கிருமி தொற்றினால் ஏற்படுகிறது. இந்த கிருமி ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால், அதிககாரமான உணவு உட்கொள்வது, நேரம் தவறி உணவு உண்பது, நேரங்கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது போன்றவற்றினால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றில் புண் ஏற்படுகிறது. இந்த புண் விரைவில் ஆறாமல் தொடரும்போது அதில் எச் பைலோரி கிருமிகள் வளர ஆரம்பிக்கிறது இதுவே நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. மேலும், தொடர்ந்து பல ஆண்டுகளாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்றவற்றினாலும் வயிற்றில் புண் ஏற்பட்டு அதுவும் புற்றாக மாறுகிறது.

அடுத்து உடற்பருமனினாலும் இந்த இரைப்பை புற்றுநோய் ஏற்படலாம். இந்த வயிற்றுப் புற்றுநோயை இரண்டுவிதமாக பிரிக்கலாம். அது ப்ரோக்ஸிமல் கேஸ்ட்ரிக் கேன்சர்(proximal gastric cancer) அடிவயிற்றில் உருவாகும் அசிட்டின் எதிர்வினையினால் உணவுக்குழாய்க்கும், சிறுகுடலுக்கு இடையில் வருவது. இது உடற்பருமன் அதிகரிக்கும்போது ஏற்படும் புற்றுநோய் ஆகும். Distal gastric cancer வயிற்றின் இரண்டாவது பாகத்தில் வருகிறது. எச் பைலோரி கிருமி தொற்றினால் ஏற்படுகிறது.

இரைப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள்

* வாயுத்தொல்லை
* செரிமானப் பிரச்னை
* வயிறு உப்புசம்

வயிறு வலி போன்றவை தொடர்ந்து ஏற்படும்போது மருத்துவரை அணுகி எதனால் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் இந்த அறிகுறிகள் சாதாரண வயிற்று புண்ணினாலும் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும், தொடர்ந்து அறிகுறிகள் தென்படும்போது அதனை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

மேலே சொன்னது போன்ற அறிகுறிகளுடன் ஒரு நபர் வரும்போது, அவருக்கு என்டோஸ்கோபி பரிசோதனை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். இந்த என்டோஸ்கோபி டெஸ்ட் மூலம் அவருக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். என்டோஸ்கோபி டெஸ்ட்டில் வயிற்று பகுதியில் ஏதேனும் கட்டி இருப்பது போன்று தோன்றினால், அது என்ன கட்டி என்பதை பயாப்ஸி செய்து அறிந்து கொள்ளப்படும்.

இந்த பயாப்ஸி பரிசோதனையில் அது என்ன கட்டி என்பதை உறுதி செய்துவிடும். ஒரு வேளை இது புற்றுநோய்க்கான கட்டி என்பது உறுதியாகிவிட்டால், அந்தக்கட்டி எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்பதை சிடி ஸ்கேன், பெட் ஸ்கேன் போன்றவற்றின் மூலம் சோதனை செய்து அறிந்து கொள்ளப்படும்.

அதன்பின் எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.அதாவது, வயிற்றுப் பகுதியில் சிறிய அளவில் கட்டி இருந்தால் அதனை ஸ்டேஜ் ஒன் என்று சொல்கிறோம். இந்த நிலையில் இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முதல்வகை, என்டோஸ்கோபி மூலமே கட்டியை அகற்றுவது. இரண்டாவது, அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது ஆகும். அதிலும், லேப்ரோஸ்கோபி அல்லது ரோபாடிக் சர்ஜரி முறை கையாளப்படுகிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்டேஜில், கீமோ தெரபி சிகிச்சைகள் சில மாதங்கள் அளிக்கப்பட்டு பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். பின்னர் மீண்டும் சில நாட்களுக்கு கீமோ தெரபி சிகிச்சை வழங்கப்படும். நான்காவது ஸ்டேஜில் இருந்தால், அப்போது அந்த புற்று செல்கள் மற்ற பாகங்களுக்கும் உறுப்புகளுக்கும் முழுமையாக பரவிவிட்ட நிலையில் இருக்கும். அந்தநிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. அதனால், அவர்களுக்கு கீமோ தெரபி மட்டுமே வழங்கப்படும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பொதுவாக, பயாப்ஸி டெஸ்டில் புற்றுநோய் இல்லாமல் எச் பைலோரி கிருமி காணப்பட்டால், உடனடியாக அதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து கட்டுப்படுத்தப்படும். இந்த கிருமி கட்டுப்படுத்தப்பட்டால் அது புற்றுநோயாக மாற வாய்ப்பு இல்லை. வயிற்றின் அடிப்பகுதியில் இருக்கும் அசிட் போன்ற திரவம் சிலசமயம், சிலருக்கு உணவுக்குழாய் வழியாக எதிர்பதமாக மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு செல்லும்போதுதான் சிலருக்கு நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. இதை ரீப்ளக்ஸ் என்போம். இது தொடர்ந்து ஒருவருக்கு ஏற்படும்போது சிலருக்கு வயிற்றில் கட்டி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், ஆரம்பத்திலேயே இந்த ரீப்ளக்ஸ்கான மருந்து மாத்திரைகள் கொடுத்து கட்டுப்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

மேலும், மதுஅருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும்.தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றினால், உடல் எடையை சராசரியாக பராமரிப்பது, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், பதப்படுத்திய உணவுகளை தவிர்ப்பது, பச்சை காய்கறிகள், பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது போன்ற ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலை மேற்கொள்ளும்போது, இரைப்பை புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.

மேலும், உணவில் அதிமான உப்பு சேர்த்துக் கொள்வதும் இரைப்பை புற்று நோய் ஏற்பட ஒரு காரணமாகும். ஜப்பான் மக்களிடையே இரைப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. ஏனென்றால், அவர்கள் அதிகளவில் உப்பு சேர்த்து பதப்படுத்திய மீன் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் இரைப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.

எனவே, உணவில் அதிகளவில் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பதும் இந்த புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்தால் இரைப்பை புற்றுநோய் என்று இல்லை எந்த புற்றுநோயுமே உடலை தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம்.

The post இரைப்பை புற்றுநோய் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Senthilkumar Ganapathi ,
× RELATED கவுன்சலிங் ரூம்