×

திருமயம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்

 

திருமயம்,பிப்.3: திருமயம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான கிராம சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து அரசந்தம்பட்டி கிராமத்திற்கு செல்லும் கிராமசாலை உள்ளது. இந்தச் சாலையை அரசந்தம்பட்டி கிராமத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்லாது பேரையூர் சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை புதுப்பித்து பல ஆண்டுகளைக் கடந்த நிலையில் சாலை தொடர் பராமரிப்பு இல்லாததால் சம்பந்தப்பட்ட சாலையின் பெரும் பகுதி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சாலையைக் கடக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றன. இதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் நாற்று நடும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசந்தம்பட்டி கிராம மக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமயம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : MRS. Pudukkottai District ,Namanasamutram ,Thirumayam ,Ponnamaravati ,May ,Dinakaran ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...