×

ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 15 பேரை இழுக்க லாலு வியூகம்: பாஜவில் சாயும் நிதிஷ் குமார்

*ஆட்சியை தக்க வைத்து கொள்ள முயற்சி பீகார் அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு திருப்பம்

பாட்னா: பீகாரில் பாஜ பக்கம் முதல்வர் நிதிஷ் குமார் சாய்கிறார். இந்தநிலையில், ஆட்சியை தக்க வைத்து கொள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 15 பேரை இழுக்க ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் திட்டமிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் 15 வருடங்களுக்கும் மேலாக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜவில் இருந்து வௌியேறினார். பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி அணியில் இணைந்துள்ள நிதிஷ் குமார், வரும் மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா என்ற கூட்டணி உருவாக அடித்தளமிட்டார். இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதனை ஏற்க நிதிஷ் மறுப்பு தெரிவித்து விட்டர். இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே முடிவு எட்டப்படாததால், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதேபோல் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், மக்களவை தேர்தலை தனித்து சந்திப்பதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா கூட்டணியில் சிறிது பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் முக்கியத்துவம் கிடைக்காததால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜவுடன் அணி சேர அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. வரும் 29ம் தேதி பீகாரில் நுழையவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் நிதிஷ் குமார் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் நேற்று 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பீகார் ஆளுநர் ராஜேந்திர பிரசாத் அலோகர் நேற்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தளித்தார். இதில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்து விட்டார். ஆனால் ஆர்ஜேடியின் தேசிய பொதுசெயலாளரும், கல்வி அமைச்சருமான அலோக் குமார் மேத்தா கலந்து கொண்டார். தேநீர் விருந்தில் தேஜஸ்வி கலந்து கொள்ளாதது பற்றிய கேள்விக்கு “யார் வரவில்லையோ அவர்களிடம் சென்று காரணத்தை கேளுங்கள்” என்று நிதிஷ் கூறியுள்ளார். இதுபோன்ற சூழல்களால் பாஜவுடன் நிதிஷ் மீண்டும் கூட்டணி சேர உள்ளதாகவும், நாளை அவர் மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் பீகாரில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் புதிய வியூகத்தை கையிலெடுத்துள்ளார். அதன்படி ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய கூட்டணி அரசுக்கு 160 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அதில், 45 பேர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், தற்போது சபாநாயகர் தவிர்த்து 114 உறுப்பினர்களின் ஆதரவு துணை முதல்வர் தேஜஸ்விக்கு உள்ளது. இன்னும் 8 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால், தேஜஸ்வி தலைமையில் ஆட்சி தொடரும். எனவே, நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க லாலு பிரசாத் யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். லாலுவின் இந்த முயற்சி பீகார் அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

* கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை

இந்த ஊகங்களுக்கு பதில் தரும் விதமாக பாஜ மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறியதாவது, “அரசியலில் யாருக்கும் நிரந்தரமாக கதவுகள் மூடப்படுவதில்லை. மூடப்பட்ட கதவுகள் நேரம் வரும்போது திறக்கப்படும். ஆனால் கதவை திறப்பது குறித்து தலைமை முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்தியா கூட்டணியில் பிளவு இல்லை

உறுதி செய்யப்படாத தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பீகார் மாநில ஐக்கிய ஜனதா தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹா அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில், “பீகாரில் ஆளும் மகாத்பந்தன் கூட்டணி நன்றாக உள்ளது. இந்தியா கூட்டணியிலும் பிரச்னை இல்லை. ஆனால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஊடகங்களில் வௌியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவை சிலரால் இயக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

The post ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 15 பேரை இழுக்க லாலு வியூகம்: பாஜவில் சாயும் நிதிஷ் குமார் appeared first on Dinakaran.

Tags : Lalu ,United Janata Dal ,Nitish Kumar ,BJP ,Bihar ,Patna ,Chief Minister ,Baja ,Dinakaran ,
× RELATED ஐக்கிய ஜனதா தள தலைவர் சுட்டுக்கொலை