×

போதையில் தாக்கியபோது ரத்த வெள்ளத்தில் மயங்கினார் மனைவியை கொன்று விட்டதாக போலீசில் சரணடைந்த கணவன்: மாதவரம் அருகே பரபரப்பு

மாதவரம்: வியாசர்பாடியில் போதையில் செங்கல்லால் அடித்தபோது, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தலைமறைவாக இருந்த கணவன், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகக் கூறி போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடி எம்கேபி நகர் 13வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (58), லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (55). மது போதைக்கு அடிமையான பாண்டியன், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி முழு போதையில் வீட்டிற்கு வந்த பாண்டியன், பரிமளாவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருகில் இருந்த செங்கல்லால் பரிமளாவின் தலையில் பாண்டியன் பலமாக அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பரிமளா மயக்கம்போட்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியன், உடனடியாக அங்கிருந்து தப்பினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பரிமளாவின் தம்பி கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து, பரிமளாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிமளா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவி உயிரிழந்து விட்டார் என நினைத்து, கடந்த சில நாட்களாக பாண்டியன் தலைமறைவானார். அவரது உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை கோயம்பேடு காவல் நிலையத்திற்குச் சென்ற பாண்டியன், தனது மனைவியை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை தொடர்புகொண்டு இதுகுறித்து கூறியுள்ளனர்.

உடனே இன்ஸ்பெக்டர் இதுபற்றி விசாரித்தபோது, பாண்டியனின் மனைவி சாகவில்லை, தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல்கள் போடப்பட்டு, தற்போது அவர் வீட்டிற்கு வந்து விட்டார், என தெரியவந்தது. இதையடுத்து, பாண்டியனை எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.  அதன்படி, பாண்டியன் எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், மனைவியை தாக்கியதாக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போதையில் தாக்கியபோது ரத்த வெள்ளத்தில் மயங்கினார் மனைவியை கொன்று விட்டதாக போலீசில் சரணடைந்த கணவன்: மாதவரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Vyasarpadi ,MKP Nagar 13th West ,Dinakaran ,
× RELATED மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி