புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வது குறித்து சரத்பவார் வீட்டிற்கு நேரில் சென்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்தாக்கரே) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு 48 தொகுதிகள் உள்ளன. இதில் சிவசேனா தாக்கரே பிரிவு மட்டும் 23 தொகுதிகளில் போட்டியிடும் என்று மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்தார். அவர் கூறுகையில்,’2019 தேர்தலில் பா.ஜ கூட்டணியில் நாங்கள் 23 தொகுதியில் போட்டியிட்டோம்.
இந்த முறையும் அதே 23 தொகுதியில் போட்டியிடுவோம். தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. டெல்லியில் தான் இதுபற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்றார். இந்தநிலையில் நேற்று டெல்லியில் உள்ள சரத்பவார் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்றார். அங்கு மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளை எவ்வாறு கூட்டணி கட்சிகளுடன் பங்கிடுவது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இடதுசாரிகள், விவசாய தொழிலாளர் கட்சிகள் மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி போன்ற சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு; சரத்பவார் வீட்டில் ராகுல் ஆலோசனை appeared first on Dinakaran.