×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

 

வத்திராயிருப்பு, டிச. 10: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஒரே நாளில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. கடந்த ஒரு மாதமாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 47 அடியை எட்டியது. கடந்த நவ.27ம் தேதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்காக வினாடிக்கு 150 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. பிளவக்கல் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் 37 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் தொடர்ந்து பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் 27 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Western Ghats ,Vathrayiru ,Plavackal Periyar Dam ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை கும்பக்கரையில் கொட்டுது தண்ணீர்