×

சென்னைக்கு அடுத்த புயல்: வதந்தி குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்

சென்னை:சென்னைக்கு அடுத்த புயல் குறித்து வதந்தி பரவி வரும் நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் கடந்த 4ம் தேதி தமிழகத்தை தாக்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தது. பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 5ம் தேதி ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

இந்த புயல் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் மேலும் ஒரு புயல் வரும் என்ற வதந்தி பரவி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வதந்தி குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘இது அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 10ம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகரும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என்று விளக்கமளித்துள்ளார்.

The post சென்னைக்கு அடுத்த புயல்: வதந்தி குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Weatherman Pradeep John ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்