×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு சிபிசிஐடி சம்மன்: வரும் 28ம் தேதி ஆஜராக உத்தரவு

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு விசாரணைக்காக வரும் 28ம் தேதி ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 5 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ், சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீதரன் வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.  இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ‘கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதுபற்றி நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.

இது சம்பந்தமாக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சிடிக்கள், செல்போன்கள், தொலை தொடர்பு சாதனங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள விவரங்களை விசாரணைக்காக கேட்டுள்ளோம். அதனை நீதிமன்றம் வழங்கினால், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளிடம் விசாரணை என்ற பெயரில் யாரையும் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்,’ என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கனகராஜ் விபத்தில் சிக்கியபோது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவகுமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் , அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவகுமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு சிபிசிஐடி சம்மன்: வரும் 28ம் தேதி ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,Summon ,Kodanadu ,CBCID Summon ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்