×

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு: ‘அவமானகரமானது’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபை: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்டது. இதில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் இந்த முடிவு அவமானகரமானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காசாவில் நிவாரண உதவிகளை தடையின்றி கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் ஹமாஸ் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் கோரி, ஜோர்டான் அரசு சார்பில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை உறுதி செய்தல்’ என்ற தலைப்பில் ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச்சபையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், பூடான் உள்ளிட்ட 121 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, இங்கிலாந்து, உக்ரைன், ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 44 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. முன்னதாக, இந்த தீர்மானத்தில் ஹமாஸ் படை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், கடந்த 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நுழைந்து நடத்திய தாக்குதலை கண்டித்தும், பணயக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் கனடா கொண்டு வந்த திருத்த தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கியது எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் உள்ளது. நமது நாடு, அகிம்சை மற்றும் உண்மையை கொள்கையாக கொண்டு நிறுவப்பட்டது. இந்த கொள்கைகளே இந்தியாவின் தார்மீக தைரியமாகவும், சர்வதேச சமூகத்தின் உறுப்பினராகவும் வழிநடத்தி உள்ளது. ஆனால், மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அழிக்கப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டும், அதில் நிலைப்பாட்டை எடுக்க மறுப்பதும் இந்தியாவின் வாழ்நாள் கொள்கைகளுக்கு எதிரானது’’ என்றார். தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளதன் மூலம், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்படியும் வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பது தெளிவாகிறது என இடதுசாரி கட்சிகள் கண்டித்துள்ளன.

* தீவிரவாதத்தை நியாயப்படுத்தக் கூடாது

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியதாவது: கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய இவ்வுலகில், தங்களின் தீர்வுக்காக சிலர் வன்முறையை நாடுவதற்கு இந்த அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்க வேண்டும். தீவிரவாதம் மிகக் கொடியது. அதற்கு எல்லையோ, தேசப்பற்றோ, இனமோ தெரியாது. எந்த வகையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்தக் கூடாது. எனவே வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாம் ஒன்றுபடுவோம். தீவிரவாதத்தை சகித்துக் கொள்ளாத அணுகுமுறையை கடைபிடிப்போம். காசாவில் தற்போது மோசமடைந்து வரும் பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொள்கிறது. மனித உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் உலக நாடுகளின் முயற்சியை வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு இந்தியாவும் பங்களித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

The post காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு: ‘அவமானகரமானது’ என எதிர்க்கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India ,UN ,Gaza ,United Nations ,Israel ,Hamas ,
× RELATED முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல்...