திருவள்ளூர்: முன்னாள் குடியரசுத் தலைவரும், ‘‘விண்வெளி ஆராய்ச்சி’’ என்ற சரித்திரத்தின் நாயகர்களில் ஒருவரான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு பூந்தமல்லி, ஜோசப் வித்ய ஷேத்ரா பள்ளியில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த அறிவியல் அறிஞராகும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அனைவரின் கண்களைக் கவரும் 100 அறிவியல் செயல்பாடுகளை பள்ளி மாணவர்கள் அமைத்திருந்தனர். மேலும் அனைவரும் அறிவியல் அறிவு பெறும் வகையில் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளுக்கான போட்டிகளும் நடைபெற்றது.
இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மௌரின், இயக்குநர் இக்னேஷியஸ் சேவியர் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி மேலாளர் ரோஸ்லின், முதல்வர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்காட்சியில் பாபா ஆட்டோமிக் ரிசெர்ச் சென்டர் இயக்குனர், அறிவியல் அறிஞர் டேனியல் செல்லப்பா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் இதில் டெக்னாலஜி இனோவேஷன் இயக்குனர் சேவியர், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் தினேஷ்குமார், டிஎஃப்டி குரூப் பள்ளிகளின் செயலாளர் மேரி ஜெகனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் போல எதிர்காலத்தில் அறிவியல் அறிஞராவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
மேலும் இந்தியா சிறந்த வல்லரசு நாடாக விரைவில் முன்னேறவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உயர்த்தவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் விழாவில் உலக சாதனை பதிவில் பங்கேற்ற மாணவன் சந்ரீஷ் வருண் 3 நிமிடங்களில் 100 கணக்குகளை செய்து காண்பித்து சாதனைப் படைத்தார்.
The post அப்துல் கலாமின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.