×

கும்மிடிப்பூண்டி அருகே சோகம் பைக்கில் சென்ற 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி: அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சின்ன புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(48). திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணய்யா(38). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கூலிவேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் மணலி கிராமத்தில் கூலிவேலைக்கு செல்ல ரமேஷ், ரமணய்யா ஆகிய இருவரும் பைக்கில் சின்ன புலியூர் எல்லை அருகே சென்று கொண்டிருந்தனர். இதில், பைக்கை ரமேஷ் ஓட்டி சென்றார்.

அப்போது, சாலையோரம் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியில் பைக் ஏறி இறங்கியது. இதில், பைக்கில் சென்ற ரமேஷ், ரமணய்யா ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. எனவே, இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவலறிந்தும் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், ரமேஷ், ரமணய்யா உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. இதுதொடர்பாக, மின்வாரிய ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அறுந்து விழும் மின்கம்பியினால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இறந்த கூலி தொழிலாளிகள் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே சோகம் பைக்கில் சென்ற 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி: அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Sogam ,Kummidipoondi ,Ramesh ,Chinna Puliyur village ,Ramanaiyya ,Sudd Nagar ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...