புதுடெல்லி: உத்தரபிரதேசம் முசாபர்நகர் பகுதியில் உள்ள குப்பாபூர் கிராமத்தில் அரசு பள்ளியில் 2ம் வகுப்பில் படித்த முஸ்லிம் மாணவன் ஒருவன் வீட்டுப்பாடத்தை செய்யவில்லை என்ற காரணத்தால், பள்ளி ஆசிரியர் அந்த மாணவனை சக மாணவர்களை விட்டு அடிக்க சொல்லியுள்ளார். அத்துடன் அந்த மாணவனின் சமூகத்தை இழிவாகவும் பேசியுள்ளார். மாணவன் அடிக்கப்படும் காட்சி வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை கண்ட காந்தியின் பேரன் மகனான துஷார் காந்தி அதிர்ச்சியடைந்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் அபய் எஸ்.
ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,’பாதிக்கப்பட்ட மாணவனை அவனது மதத்தின் காரணமாக அடிக்குமாறு ஆசிரியர் கூறினார் என்றால் அங்கு என்ன வகையான கல்வி கற்பிக்கப்படுகிறது? குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக ஒரு மாணவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றால், அங்கு தரமான கல்வி கற்பித்து இருக்க முடியாது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது’ என்றனர்.
அப்போது உ.பி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘இந்த வழக்கில் வகுப்புவாத கோணம் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,’இது மிகவும் தீவிரமான பிரச்னை. நாங்கள் இதை தீவிரமாக விசாரிப்போம். இந்த சம்பவம் மாநிலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். இந்த சம்பவம் பற்றி மூத்த ஐபிஎஸ் அதிகாரி விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
The post முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா?..உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.