×

இருதரப்பும் பஞ்சாயத்து பேசி பலனில்லாததால் பால் பாக்கி தகராறில் 3 பேர் சுட்டுக் கொலை: பீகாரில் நேற்றிரவு பயங்கரம்

பாட்னா: பீகாரில் பால் பாக்கி தகராறில் இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பதுஹா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுர்காபர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் நேற்றிவு 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு ெசன்ற போலீசார், மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாட்னா எஸ்எஸ்பி ராஜீவ் மிஸ்ரா கூறுகையில், ‘துப்பாக்கிச் சூட்டில் பலியான பிரதீப் குமார் (35), ஷைலேஷ் குமார் (40), ஜெய் சிங் (50) ஆகியோரின் அடையாளம் உறுதியானது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மின்டஸ் குமார் (22) என்பவர் படுகாயமடைந்ததால், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் பால் நிலுவைத் தொகை தொடர்பாக இரு குழுக்களிடையே தகராறு நடந்து வருகிறது. ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றொரு குழுவை சேர்ந்தவர்களிடம் நிலுவைப் பணம் கேட்கச் சென்றுள்ளனர். அப்போது இரு குழுக்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த இருதரப்பை சேர்ந்த சிலர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இரு தரப்பிலிருந்தும் தோட்டாக்கள் பாய்ந்ததால், இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். லேசான காயமடைந்த சிலரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

பால் பாக்கி பிரச்னை மட்டுமின்றி, நிலத்தகராறு தொடர்பான முன்விரோத பிரச்னையும் இருந்துள்ளது. பால் பாக்கி பணம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பஞ்சாயத்து நடந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இருதரப்பையும் ஒன்றாக உட்கார வைத்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பால் பாக்கி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை. அதனால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகிறோம்’ என்றார்.

The post இருதரப்பும் பஞ்சாயத்து பேசி பலனில்லாததால் பால் பாக்கி தகராறில் 3 பேர் சுட்டுக் கொலை: பீகாரில் நேற்றிரவு பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Pal Paki ,Bihar ,Patna ,Pal Baki Dispute ,Bal Paki ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை