
சேலம்: திமுக ஆட்சி மீது குறை சொல்ல முடியாததால், சனாதனம் குறித்து அண்ணாமலை புலம்பிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று காலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பொதுமக்கள், இறை தொண்டர்கள் என அனைவராலும் பாராட்டப்படும் வகையில் ஆயிரமாவது கோயில் கும்பாபிஷேக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. 1959ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை துவங்கப்பட்ட பின், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆட்சியில் தான் அதிகப்படியான இறை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை மக்கள் பாராட்டுகிறார்கள். திமுக ஆட்சியின் மீது எந்த குறையும் சொல்ல முடியாமல் பாஜ திணறி வருகிறது. அதனால் தான் அவர்கள், சனாதனத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள். அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அவர், சனாதனத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறுதல் இருப்பதை, பெண்ணின் கற்புடன் தொடர்புபடுத்தி புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாததால் சனாதனம் பற்றி புலம்பி வருகிறார். உப்பு சப்பில்லாத பிரச்னையை கிளப்புகிறார். வேலையற்ற வீணர்களின் பொழுதுபோக்கு பேச்சாகவே கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் சமத்துவத்தை பின்பற்றும் ஆட்சி நடக்கிறது. ஒன்றிய பாஜ அரசின் தோல்வியை மறைக்கும் விதமாக மக்களை திசைதிருப்பும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். நாங்கள் மக்களுக்கான இறைபணியை செய்துகொண்டே இருக்கிறோம். சனாதனத்தை ஏற்றவர்களை எதிர்க்கவில்லை. நாங்கள் சனாதனத்தில் உள்ள கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம். அதாவது, பெண்கள் கல்வி கற்கக்கூடாது, குலக்கல்வி முறை, உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை தான் எதிர்த்திருக்கிறோம். மக்களிடம் உயர்வு, தாழ்வு கூடாது, தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமத்துவம் ஏற்பட வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம். இந்துக்களை மனதார வரவேற்றே ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
The post ஆட்சி மீது குறை சொல்ல முடியாததால் சனாதனம் குறித்து புலம்பும் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.