×

ஆவணியும் ஆதவனும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன. காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடு களில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர் களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் தினமும் நமஸ்கரித்து வழிபட்டால், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் சீராகும்.

நாம் நமது சொந்த வீட்டில் இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில், வீட்டு உரிமையாளரின் கட்டுப்பாடுகளை சுமந்து வசிக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலிசெய்யச் சொல்லிவிடுவார்கள்.

நம்முடைய வீட்டை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்பொழுது, இது ஹால், இது சமையலறை, இது பூஜையறை என்று மற்றவர்களிடம் சொல்லி மகிழ்கிறோம் அல்லவா! நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்கும் சூரியனுக்கு, சிம்மம் சொந்த வீடாகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால், ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை அடங்கிய ராசிதான் சிம்மராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன், மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், ஜெகத்தை ஆளலாம். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பைப் பெற்று, புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்ல இயலும். பூர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், பெரும் பேரும்பாராட்டும் வாழ்க்கை அமையும்.

எனவே, ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாவிதமான அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். கோபம் அதிகம் வந்தாலும், குணத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதிக பாவங்களைச் செய்ய மாட்டார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். தேசபக்தியுடன், தெய்வபக்தியையும் கொண்டு விளங்குவர். உதவிசெய்ய ஓடோடி வருபவர்களாகவும் இருப்பார்கள். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் விளங்குவர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்சநேரத்தில் அடிபணிய வைத்துவிடுவர். அரசாங்க ஆதரவு அதிகம் பெற்றிருப்பர்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில், சூரிய பலம் அதிகமாக இருப்பதால், முப்பது நாட்களிலும் அதிகாலையில் கீழ்க்கண்ட சூரியக் கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும். சோர்வில்லாத வாழ்வு அமையும்.

‘காசினி இருளை நீக்கிக் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்க
வாசி ஏழுடைய தேரின்மேல் மகா கிரிவலமாகி வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி! போற்றி!’
– என்று சூரியனுக்குரிய பாடல் எடுத்துரைக்கின்றது.

‘காசினி’ என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகின் இருளைப் போக்கி ஒளியைப் பாய்ச்சும் ஒரே கிரகம் சூரியன்தான். எனவே, இருள்மயமான வாழ்வு அமைந்தவர்களும், ஒளிமயமான வாழ்வு அமைய விரும்புபவர்களும் இந்த ஆவணி மாதம் முழுவதும் இல்லத்தில் சூரியனை வழிபடுவதோடு, சூரியனுக்குரிய ஆலயமான சூரியனார் கோயில் சென்றும் வழிபட்டு வரலாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்று சொல்லுவர். அதாவது, கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால், காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும்.

சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரியனுக் குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங் களைப் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக மாறும். கண்நோய் நீங்கும், புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.

தொகுப்பு: அனுஷா

The post ஆவணியும் ஆதவனும் appeared first on Dinakaran.

Tags : Avani ,Aadhavan ,Lord ,Surya ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...