பூந்தமல்லி : பூந்தமல்லியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள 30 வாகனங்களின் பயன்பாட்டை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார். பூந்தமல்லி நகராட்சி பகுதியை சுகாதாரமுள்ள தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வாகனங்கள் பற்றாக்குறையாக இருந்தன.
இதையடுத்து, கூடுதலாக மின்கல வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக, பொது சுகாதார பிரிவில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் 10 மின் கலன் வாகனங்கள் மற்றும் 20 இலகு ரக வாகனங்கள் சமீபத்தில் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி நகராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்த வாகனங்களை கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post பூந்தமல்லியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள ரூ.1.13 கோடி மதிப்பில் 30 வாகனங்கள்: பயன்பாட்டை எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
