×

கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி

இந்தியாவில் பல சக்தி ஸ்தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஸ்தலங்கள் நம் மனத்தில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. சென்னை காளிகாம்பாள், கற்பகாம்பாள், மதுரை மீனாட்சி, கொல்கத்தா காளி தேவி, மும்பை மகாலட்சுமி, கொல்லூர் மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதி, காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இதே போல் மராட்டிய மாநிலத்திற்கு செல்வவளத்தை தரும் மகாலட்சுமி கோல்ஹாபூரில் எழுந்தருளியுள்ளாள். இத்தலம் ‘தட்சிண காசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மகாலட்சுமி, சௌந்தர்ய ரூபவதி. துர்கா லட்சுமி ஐக்ய ரூபத்தை எடுத்துக் காட்டுவதை போல் அமைக்கப்பட்டுள்ள தேவியின் கிரீடத்தில் நாகம் படமெடுத்தாடுகிறது. அன்னையின் பாதத்தில் சிம்மத்தின் ரூபமும், தாமரையின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் ஸ்ரீமகாலட்சுமி, விஷ்ணு ஸ்வரூபமாக இருப்பதாகவே பக்தர்கள் நம்புகிறார்கள். முன்பொரு சமயம் சிவனுக்கும் சக்திக்கும் வாரணாசி க்ஷேத்ரம் பெரியதா அல்லது சக்தியின் க்ஷேத்ரம் பெரியதா என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல. அவர் ஒரு தராசில் இரண்டையும் வைக்க, தேவியின் பக்கமே தராசின் தட்டு தாழ்ந்தது. இரண்டு தலங்களும் சிறந்ததே. ஆயினும் தேவியின் திருத்தலம் ஒரு மணி அளவு அதிக பெருமை உடையதென்று மகாவிஷ்ணு தீர்ப்பளித்தார். சிவனுக்கும் சக்தியைக் கொடுப்பவளல்லவா அந்த பராசக்தி!

பாவங்களை போக்க காசிக்கு செல்வார்கள். பக்தர்களின் பாவங்களை போக்குவதோடு, கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுத்து அருள்புரிபவள் கோல்ஹாபூர் மகாலட்சுமி. அதனாலேயே, ஆண்டு முழுவதும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இத்தலம் கரவீரபீடம் என்றும், அன்னையும் ‘கரவீரவாஸினி’ என்று போற்றப்படுகிறாள். பிரம்ம தேவர், கயா, லவணன், கோலன் என மூன்று புத்திரர்களை படைத்ததாகவும், இதில் லவணாசுரன் மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்டதாகவும், கோலன் இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து பின் தன் மூத்த மகனான கரவீரனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கானகம் சென்றதாக கூறப்படுகிறது.

கரவீரனின் கொடுங்கோல் ஆட்சியினால், மும்மூர்த்திகளும் அவன் உடலை சுக்கு நூறாக சிதைத்தனர். அவன் உறுப்புகள் விழுந்த இடங்கள் தீர்த்தங்களாக உருப்பெற்றன. அவன் நினைவாக இந்த க்ஷேத்ரமும் கரவீரபுரம் என்று அழைக்கப்படுகிறது. வனம் சென்ற கோலன், கரவீரனின் முடிவைக் கேள்வியுற்று, தேவர்களை எதிர்த்தான். பிறகு ஸ்ரீமகாலட்சுமியின் துணையால், மும்மூர்த்திகளும் வெற்றி பெற்றதை அறிந்து, தேவியைக் குறித்து தவமிருந்தான். அவனுடைய தவத்தை ஏற்று தேவி காட்சியளிக்க நூறு வருடங்களுக்கு, தேவி இந்த இடத்தில் இருக்கக்கூடாது என்று வரம் கேட்டான். வரத்தை தந்து விட்டு லட்சுமிஅவ்விடத்தை விட்டு சென்றுவிட்டாள். 100 வருடம் சென்றதும் மகாலட்சுமி கோலனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. கோலன் ஆண்ட ஊர்தான் கோல்ஹாபூர் ஆயிற்று.

மகாலட்சுமி அன்னையுடன் திருமாலும் இங்கு வாசம் செய்வது விசேஷம். மகாபிரளயம் நிகழ்ந்த காலத்தில் அன்னையும் திருமாலும் இத்தலத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதால், இத்தலம் ‘அவிமுக்தி’ க்ஷேத்திரமாக புகழ் பெற்றுள்ளது. வைகுண்டத்தில் வாசம் செய்வதை விட அன்னை மகாலட்சுமியின் இஷ்ட தலமான கோல்ஹாபூரில்தான் திருமால் அதிக காலம் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் கரவீரபீடமாக விளங்குகிறது.

இங்கு மஹிஷாஸுரமர்த்தினியான மகாலட்சுமியாக அருள்கிறாள். தேவிக்கு ஆசனமோ, திருவடிகளில் கமல மலரோ இல்லை. இருபுறங்களிலும் யானைகளும் இல்லை. சிரசில் சிவலிங்கம் மட்டும் உள்ளது. பக்தர்கள் செய்த குடம் குடமான பால், தேன், சந்தன அபிஷேகத்தால் தேவியின் திருவுரு சிதையத் தொடங்க, சிலைக்கு வஜ்ரலேக் எனும் மருந்துக்காப்பு சாத்தப்பட்டது. தற்போது தேவிக்கு இங்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக பஞ்சகால பூஜைகள் தினமும் நடைபெறுகிறது. பூஜையின் போது வித விதமான பணியாரங்கள் படைக்கப்படுகின்றன. தலையின் வைரக்கிரீடம், ஐந்துதலை வெள்ளி நாகம் குடைபிடிக்க சர்வாலங்கார பூஷிதையாக அம்பிகை ஜொலிக்கிறாள்.

சாரதா நவராத்திரி ஒன்பது நாட்களும் அலங்காரம் செய்யப்பட்டு தினம் ஒரு வாகனத்தில் தேவி பவனி வருவதைக் காணக் கோடி கண் வேண்டும். ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் எட்டு சிவலிங்கங்களும், நான்கு திசைகளிலும் நான்கு தடாகங்கள் உள்ளது. முழுக்க முழுக்க கருங்கல்லால் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயிலில், நான்கு திசைகளை விளக்கும் வகையில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கோயிலுக்கு நான்கு திசைகளிலும் நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு திசையில் கோயிலின் பிரதான நுழைவுவாயில் இருந்தாலும், பக்தர்கள் வடக்கு வாசல் வழியாகவே கோயிலுக்குள் பிரவேசம் செய்கின்றனர்.

ஏனெனில் அங்கிருந்துதான், கோயிலின் ஒவ்வொரு பிராகாரமாக வழிபாடு துவங்குகிறது. வடக்கு திசையில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை முழு முதற்கடவுள் விநாயகப் பெருமான் வரவேற்கிறார். கருங்கல் சுவற்றில் விநாயகர் விக்ரகம் செதுக்கப்பட்டு காவி நிறத்தில் காட்சியளிக்கிறார். ‘சாக்ஷி கணேஷ்’ என்றழைக்கப்படும் விநாயகரை மூன்று முறை கரவொலி எழுப்பி வணங்கி விட்டு உள்ளே சென்றால், வலது பக்கத்தில் மகாகாளியம்மன், சிவப்பு பட்டுடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி சாந்த சொரூபிணியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள். எதிரில் திரும்பினால் இடது பக்கத்தில்ஸ்ரீமகாலட்சுமி யந்திரம். அம்மன் உருவப்படத்துக்கு கீழ், கண்ணாடிப் பேழையில் யந்திரம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. குங்குமம் தூவி வழிபடுவது ஐதீகம். அதற்கு நேர் எதிர் திசையில் வருண பகவான் சந்நதி.

இதற்கு அடுத்ததாக வருவது கருவறை. கருங்கல் பீடத்திற்கு மேல், வெள்ளியால் அமைக்கப்பட்ட சிங்கத் தலை சிம்மாசனத்தில் மகாலட்சுமி திருவருட்பாலிக்கிறாள். 3 அடி உயரத்துக்கு செதுக்கப்பட்ட அதியற்புதமான விக்ரகத்தில் பட்டுடுத்தி, தலையில் தங்க கிரீடமும் உடல் முழுவதும் பொன்னகையலங்காரத்துடன் தரிசனம் அளிக்கும் அன்னையை காணும் பக்தர்கள் பரவசமடைகிறார்கள். அன்னையை வணங்க மனதில் ஆத்ம திருப்தியை பக்தர்கள் உணருகிறார்கள். ஸ்ரீமகாலட்சுமியின் கருவறை அருகில் தனவந்திரி விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தின் உடல் முழுவதும் விரல்களால் அழுத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதன் மூலம் நம்மை பிடித்த பிணிகள் விலகி, தனபாக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.

பெரும்பாலும் கோயில்களில் கருவறை விக்ரகம் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருப்பது வழக்கம். இத்தலத்தில் மகாலட்சுமி அன்னை மேற்கு திசையை நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறாள். கோயிலின் மேற்கு திசை சுவற்றில் சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. வருடத்தின் 6 நாட்கள் இந்த துவாரத்தின் வழியாக சூரிய பகவான் தன் கதிர்களின் மூலம் அன்னையை தரிசிக்க வருவதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்த சிறு துவாரத்தின் வழியாக சூரிய கதிர்கள் அன்னையின் மேல் படர்கிறது. முழு நிலவு நாட்களில் மட்டும் வெள்ளி சப்பரத்தில் கோயில் வளாகத்தில் அன்னை வீதியுலா வந்து மக்களுக்கு தரிசனம் அளிக்கிறாள்.

கருவறையில் அன்னையை வணங்கிய பிறகு வலது பக்கம் வந்தால், மகாசரஸ்வதி. கல்வி பயிலும் மாணவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். கிழக்கு திசை வழியாக வெளியே வந்து ஒரு சுற்று சுற்றி, மீண்டும் வடக்கு திசைக்கு வந்தால் வெங்கடேசப் பெருமாள் சந்நதி. மூன்று முகக் கடவுளான தத்தாத்ரேயர் சந்நதி. அடுத்து சந்நதியாக நவக்கிரக சந்நதி. கோயில் வளாகம் முழுதும் சூர்ய பகவான், சனி பகவான், ராதாகிருஷ்ணர், விட்டல் ருக்மணி (கிருஷ்ணர் ருக்மணி), கஜலட்சுமி அம்மன், பார்வதியுடன் சிவபெருமான் சந்நதி, கவுரி சங்கர் ஆலயம் என கோயிலின் நான்கு புறங்களிலும் சிறு சிறு ஆலயங்கள் உள்ளன.

கோயிலின் வடக்கு வாசல் அருகில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தனி ஆலயம் இருப்பது இன்னும் சிறப்பு. சிவபெருமானுக்கும் தனி சந்நதி இருக்கிறது. இத்தலத்தில் ஸ்ரீமகாலட்சுமி அன்னைக்கு தினசரி 5 கால பூஜை நடத்தப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜை. தொடர்ந்து 8 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், பிற்பகல் மற்றும் மாலையில் மேலும் மூன்று கால பூஜைகளும் நடத்தப்படுகிறது.மும்பையிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் புனேயில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது கோல்ஹாபூர். கோல்ஹாபூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் ஆட்டோவில் 5 நிமிட பயணத்தில் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலை சென்றடையலாம்.

தொகுப்பு: மகி

The post கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி appeared first on Dinakaran.

Tags : Kolhapur Mahalakshmi ,Kolhapur ,India ,Chennai Kalikampal ,
× RELATED மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமர்...