×

வானில் ஒலித்த மர்ம சத்தத்தால் மக்கள் பீதி தண்டராம்பட்டில் பரபரப்பு

தண்டராம்பட்டு, ஆக.17: தண்டராம்பட்டு பகுதியில் நேற்று வானில் விட்டுவிட்டு ஒலித்த மர்ம சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென வானில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை விட்டுவிட்டு அந்த மர்ம சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வானை நோக்கி பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த சத்தம் ஏதோ ஹெலிகாப்டர் செல்வதுபோல் இருந்தாலும், அவர்களுக்கு கண்களுக்கு எதுவும் தென்படவில்லை.

இதுகுறித்து அருகில் உள்ள கிராம மக்களிடம் விசாரித்தபோது, அவர்களும் தங்கள் பகுதியில் அந்த மர்ம சத்தம் தொடர்ந்து கேட்டு வருவதாக தெரிவித்தனர். நேற்று இரவு 9 மணி வரையிலும் வானில் ஒலித்த இந்த மர்ம சத்தத்தால் தண்டராம்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் வேற்று கிரகவாசிகள் வானில் சென்றதாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தற்போது, தண்டராம்பட்டு பகுதியில் வானில் ஒலித்த மர்ம சத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வானில் ஒலித்த மர்ம சத்தத்தால் மக்கள் பீதி தண்டராம்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thandarampattu ,Thiruvannamalai district ,Thandarambat ,
× RELATED பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி