×

வார்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ₹2 லட்சம் அபராதம் திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு தனியார் பள்ளி விடுதியில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை

திருவண்ணாமலை, மே 14: சேத்துப்பட்டு அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வார்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2லட்சம் அபராதமும் விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை மகன் துரைபாண்டியன்(34), எம்ஏ பிஎட் பட்டதாரி. சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் அவரது மாமியார் வீட்டில் தங்கி வசித்து வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

அப்போது, விடுதியில் தங்கி இருந்த சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை எழுப்பி, மிரட்டி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவதை இவர் வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 12.3.2022 அன்று, மூன்று சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட துரை பாண்டியன் முயற்சித்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் விடுதியை விட்டு வெளியேற்றி விடுவேன் என அச்சுறுத்தி அனுப்பி உள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவர்களிடம் வார்டன் துரை பாண்டியன் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வார்டன் துரைபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விடுதி வார்டன் துரை பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வார்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ₹2 லட்சம் அபராதம் திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு தனியார் பள்ளி விடுதியில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை appeared first on Dinakaran.

Tags : Warden ,Tiruvannamalai Boxo Court ,Tiruvannamalai ,Tirunelveli District ,Dinakaran ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...