×

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் வாலிபரை குத்தி கொன்றேன்

வானூர், ஆக. 15: வானூர் வாலிபர் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது நண்பர் தேவாவை ஆரோவில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முகுந்தன் (24). அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் தேவா (32). இவர்கள் இருவரும் நண்பர்கள். இதற்கிடையே லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கோமதிக்கும் (40), தேவாவுக்கும் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோமதியுடன் வசிக்காமல் அவரது கணவர் பாலசுப்பிரமணியன் விலகி தனியாக வசித்து வருகிறார்.

இது தேவாவுக்கு சாதகமாகி போனது. இந்நிலையில் கோமதியின் மகள் ரம்யாவை, தனது வலைக்குள் சிக்க தேவா முயற்சி செய்தார். மேலும் ரம்யாவை ஒருதலைப்பட்சமாக தேவா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவாவின் நண்பர் முகுந்தனுக்கு ரம்யா அறிமுகமாகியுள்ளார். தாயிடம் தேவா கள்ளத்தொடர்பில் இருப்பதால் முகுந்தனை ரம்யா காதலித்தார். இருவரும் காதலர்களாக வலம் வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முகுந்தனும் ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கோமதியிடம் கள்ளத்தொடர்பில் இருக்கும் தேவாவை பலமுறை முகுந்தன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

முகுந்தனிடம் பிரச்னை தீவிரமாகவே புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான கலைவாணர் நகரில் கோமதிக்கு வீடு வாடகைக்கு எடுத்து தேவா தங்க வைத்தார். இதற்கிடையே கோமதி தங்கி இருந்த வீட்டுக்கு எதிரே முகுந்தன் அவரது மனைவி ரம்யா இருவரும் வாடகைக்கு குடி வந்தனர். வருமானத்துக்காக செல்லப்பிராணி நாய்களை குட்டியிலிருந்து வளர்த்து, அதனை முகுந்தன் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். தேவாவும் இதே தொழிலில் ஈடுபட்டு வந்தார். கோமதி வீட்டுக்கு வரும் தேவா, முகுந்தனின் மனைவியிடமும் முன்பு போல நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இதனை கோமதி கண்டித்துள்ளார். இதனால் தேவாவுக்கு கோமதிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படவே தேவாவை விட்டு விலக கோமதி முடிவு செய்தார். கடந்த 12ம் தேதி இரவு முகுந்தனும், ரம்யாவும் புதுச்சேரியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, முகுந்தனை செல்போனில் அழைத்த கோமதி உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அங்கு சென்ற போது, கோமாதியுடன் வாக்குவாதத்தில் தேவா ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது இருவரும் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். நான் பணம் கொடுத்து வாடகைக்கு இருக்கும் வீட்டில் நீ இருக்க கூடாது வெளியே போ என முகுந்தனை பார்த்து கேட்கவே ஆத்திரம் அடைந்த முகுந்தன் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தேவாவை தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியுள்ளார்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதில் ஆத்திரமடைந்த தேவா தான் வைத்திருந்த பேனா கத்தியால் முகுந்தனை கழுத்து, வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தி கிழித்ததால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து முகுந்தன் இறந்தார். ேமற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

The post கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் வாலிபரை குத்தி கொன்றேன் appeared first on Dinakaran.

Tags : Vanur ,Deva ,Aaro ,
× RELATED பைக்கில் சென்ற இளைஞர் தடுப்பு கட்டையில் மோதி பலி