×

புதுவையில் வீடுபுகுந்து இளம்பெண்ணை தாக்கி காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல்

புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் மனைவி வித்யா (35). ரெட்டியார்பாளையத்தில் பேன்சி மற்றும் கிப்ட் ஷாப் நடத்தி வருகிறார். இதற்கு முன்பு மத்திய அரசின் உணவுக் கழகத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினராக வித்யா பணிபுரிந்துள்ளார். புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் வசிப்பவர் சிவசங்கரி. கொரோனா காலத்தில் புதுவை சுகாதார துறையில் ஏஎன்எம் (செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர்) ஆக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த இவர் லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்கிறார். இவர் அவ்வப்போது வித்யாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுப்பாராம்.

கடந்த ஜனவரியில் சக ஒப்பந்த ஊழியர்களான கருவடிக்குப்பம் ஏஎன்எம் செவிலியர் குமாரி, பெரிய முதலியார்சாவடி செவிலியர் பாக்யா ஆகியோருடன் வந்த சிவசங்கரி அத்துமீறி வித்யாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை அசிங்கமாக திட்டியதோடு கல்லால் தாக்கினார்களாம். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. பின்னர் மன்னிப்பு கேட்கவே இவ்விவகாரத்தை வித்யா போலீசில் முறையிடவில்லை என தெரிகிறது.

அடுத்த மாதத்தில் கிப்ட் ஷாப்புக்கு வந்த 3 பேரும், சக வியாபாரிகளிடம் வித்யாவைப் பற்றி ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டியதோடு, அவரது குடும்ப நண்பரான புதுச்சேரி இன்ஸ்பெக்டர் ஒருவருடன் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் எடுத்த புகைப்படத்தை காண்பித்து அவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக அசிங்கப்படுத்தினார்களாம். குடும்ப வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்தியும், சமூக அந்தஸ்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டதாக தெரிகிறது.

மேலும் வித்யாவின் கணவருக்கும், டெல்லியில் உள்ள அவரது அண்ணன் அரிகிருஷ்ணனையும் தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு அவதூறான வார்த்தைகளை மேற்கண்ட 3 பேரும் கூறி வந்தார்களாம்.
இதையடுத்து தனது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அசிங்கமாக திட்டி தாக்கி காரை சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்த சிவசங்கரி, குமாரி மற்றும் பாக்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வித்யா முறையிட்டார். வடக்கு எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சிவசங்கரி உள்பட 3 பேர் மீதும் 6 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

The post புதுவையில் வீடுபுகுந்து இளம்பெண்ணை தாக்கி காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Satyaraj ,Vidya ,Redyarpalayam, Puducherry ,Redyarpalayam ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி