×

NLC விவகாரம்; பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?.. அதை பார்க்கும் போது அழுகை வந்தது: நீதிபதி வேதனை

சென்னை: நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. நிலத்தின் மதிப்பை விட 3 மடங்கு அதிக இழப்பீடு கொடுக்கப்பட்டது என NLC நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலம்; சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் கூறியுள்ளது. தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. விளைநிலத்தில் புல்டோசர் கொண்டு கால்வாய் தோண்டும் பணி நடந்ததை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி எம்.தண்டபாணி வேதனை தெரிவித்தார்.

நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம். அரிசிக்கும் காய்கறிகளுக்கும் அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். பூமியை தோண்டி நிலக்கரி, மீத்தேன் என எடுத்துக் கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? என்.எல்.சி. கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை; இதுதான் என் கருத்து என்று கூறினார்.

The post NLC விவகாரம்; பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?.. அதை பார்க்கும் போது அழுகை வந்தது: நீதிபதி வேதனை appeared first on Dinakaran.

Tags : NLC ,Chennai ,Ikord ,Neyveli ,Judge ,Agony ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...