×

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தொடர்ச்சியாக 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடிமாத முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மூலவருக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமிதரிசனம் செய்ய வந்திருந்தனர். பொதுதரிசனம், ரூ..50 மற்றும் ரூ..100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று, காத்திருப்பு மண்டபம் வழியாக வந்து சுமார் 1 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயிலின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக உற்சவர் ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராய் காட்சியளித்தார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.

The post ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Siruvapuri Murugan Temple ,Adi ,Periyapalayam ,Balasubramanya Swamy temple ,Siruvapuri ,Tiruvallur district ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...