விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் பகுதியில் கடந்த மே மாதம் 13ம் தேதி மெத்தனால் என்ற விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியாயினர். விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து சாராய வியாபாரிகள் அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, முத்து, குணசீலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனால் சப்ளை செய்ததாக புதுச்சேரி பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்கிற ராஜா, ஏழுமலை, சென்னை ரசாயன ஆலை உரிமையாளர் இளையநம்பி மற்றும் மெத்தனால் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் அடுத்த பெரம்பை நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான கள்ளச்சாராய வியாபாரிகள் முத்து, அமரன், ரவி, மண்ணாங்கட்டி, ஆறுமுகம் ஆகிய 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆட்சியர் பழனி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சிறையில் உள்ள 5 பேரிடமும் உத்தரவு நகலை சிபிசிஐடி போலீசார் வழங்கினர்.
The post மரக்காணம் விஷ சாராய வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.