தேனி, ஜூலை 6: தேனியில் இருந்து போடி செல்லும் சாலையை தேசிய நெடுஞ்சாலை பராமரித்து வருகிறது. இதில், பழனிசெட்டிபட்டியை அடுத்து போடி செல்வதற்கான போடி விலக்கில் முறையான பிரிவு சாலை அமைக்கப்படாமல் வாகன ஓட்டுனர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனால் இப்பகுதியில் எராளமான விபத்துக்கள் நடந்து வந்தன. இதனையடுத்து, தேனி போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலைத் துறையினருடன் பேசி, போடி விலக்கில் விபத்தை தடுக்க பேரிகார்டுகளாலான ரவுண்டானாவை உருவாக்கி உள்ளனர்.
இதன்படி, முத்துத்தேவன்பட்டி வழியாக தேனி வரும் வாகனங்களும், தேனியில் இருந்து போடி செல்லும் வாகனங்களும் எவ்வித குழப்பமும் இல்லாமல் வாகன விபத்தை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைந்துள்ளது. இதேபோல, போடி விலக்கில் இருந்து பிரிந்து சென்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய பைபாஸ் சாலையை சந்திக்கும் பகுதியிலும் முறையான ரவுண்டானா இல்லாமல் ஏராளமான விபத்துக்கள் நடந்து வந்தன. இதனையடுத்து, இப்பகுதியிலும் நெடுஞ்சாலைத் துறையினருடன் பேசி போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளுடன் கூடிய ரவுண்டானாவை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தேனி அருகே போடி விலக்கில் விபத்தை தடுக்க பேரிக்கார்டு ரவுண்டானா: போக்குவரத்து போலீசார் ஏற்பாடு appeared first on Dinakaran.