சென்னை: சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதன் மூலம் சட்டவிரோதமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. நாடாளுமன்றம் இயற்றிய சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என்றார். இதையடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை. ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத்துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது, ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார் என்றார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு மீது வாதங்களை முன் வைத்த டெல்லி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது, முடிந்தது தான். கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது. 15 நாட்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது.வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
வாதத்துக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத் துறையின் உரிமை எனவும், காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என்று கோரினார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.
The post சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு: ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.