×

மேய்ச்சலுக்கு விடப்பட்ட கால்நடைகள் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம்

கிருஷ்ணராயபுரம், ஜூன் 18: தமிழ்நாட்டில், கொல்லிமலை, கல்வராயன் மலை, தாளவாடி போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மலைவாழ் மக்கள் இதை மானாவாரியில் சாகுபடி செய்து வந்த நிலையில் தற்சமயம் அனைத்து நிலப்பரப்புகளிலும் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கானது 17ம் நூற்றாண்டில் போா்த்துக்கீசியா்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நைஜீரியா நாட்டில் அதிகளவில் மரவள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் நைஜீரியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டாலும், உற்பத்தியைப் பொருத்தவரை தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு காரணம் கேரளத்தை விட தமிழகத்தில் மரவள்ளியின் உற்பத்தித்திறன் அதிகரித்து காணப்படுவதேயாகும். தமிழ்நாட்டில் சுமாா் 5 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும். மேலும், இது சொட்டு நீருக்கு உகந்த பயிர். இது ஓராண்டு பயிர். மரவள்ளி கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள் மரவள்ளி கிழங்கு குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு எனக் கூறுவார்கள். வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகிறது.

பயிரிடும் முறைகள்: ரகங்கள், கோ 2, முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ், எச் 226, ஏத்தாப்பூர் 1 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்: பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். மானாவாரியில் செப்டம்பர் அக்டோபர் மாதம் நடவு செய்ய வேண்டும்.
மண்: செம்மண், கரிசல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும். களிமண், வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0க்குள் இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கச் செய்யவேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். விதையளவு ஒரு எக்டருக்கு 1900-2500 கிலோ கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும். விதைநேர்த்தி ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும். பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும்.

களை மேலாண்மை: நடவு செய்து 20வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்பொழுது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்து விடவேண்டும். பிறகு 3ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைப்புகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு: வெள்ளை ஈ மரவள்ளியைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும். இதற்கு 5% வேப்பங்கொட்டைச் சாறு (100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) தெளிக்கலாம். இதனால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். அறுவடை இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும். மகசூல் 240 நாட்களில் எக்டருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும். ஊடுபயிர் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

பயன்கள்: இத்தாவர கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பருத்தி மற்றும் சணல் ஆடைகள் தயாரிப்பிலும், காகிதம் மற்றும் கடினமான அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்தானது இதய நோய்கள், பெருங்குடல் மற்றும் புற்றுநோய் ஆபத்துகளை குறைப்பதுடன் நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. இக்கிழங்குகள் உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.

The post மேய்ச்சலுக்கு விடப்பட்ட கால்நடைகள் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Tamil Nadu ,Kollimalai ,Kalvarayan Hill ,Thalavadi ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...