லண்டன்: ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக களமிறங்கினார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(31). ஆனால் ஏப்.3ம் தேதி சென்னையில் நடந்த லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் காயமடைந்தார். அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அணியில் இருந்து விலகினார். ஆனாலும் நாடு திரும்பாமல் சென்னையில் இருந்தபடியே சிகிச்சை முடித்துக் கொண்டுதான் நாடு திரும்பினார். சென்னை அணி அவரை ரூ.16.25கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. லார்டுஸ் அரங்கில் நேற்று தொடங்கிய அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் மீண்டும் கேப்டனாக களமிறங்கி உள்ளார் ஸ்டோக்ஸ்.
ஆட்டத்துக்கு முன்னதாக பேசிய ஸ்டோக்ஸ், ‘சென்னையில் இருந்த போது மருத்துவக் குழுவுக்கு நம்ப முடியாத அளவுக்கு ஒத்துழைப்பு தந்தேன். அதற்காக கடினமாக உழைத்தேன். விண்வெளிக்கு சென்று வந்ததை போல் உணர்ந்தேன். மனமும், உடலும் வெவ்வேறு வகையானவை. ஆனாலும் அவை ஒன்றிணைக்கும் சிறந்த வாய்ப்பை எனக்கு நானே வழங்கியுள்ளேன். ஐபிஎல் போட்டிக்காக இந்தியாவில் சுமார் 10 வாரங்கள் இருந்தேன். ஆனால் காயம் காரணமாக என்னால் முழுமையான பங்களிப்பை அணிக்கு வழங்க முடியவில்லை.
அதற்காக வருந்துகிறேன். காயத்தில் இருந்த காலம் எனக்கு ஒரு விரக்தியான காலகட்டமாக இருந்தது. அந்த தொடரில் மீண்டும் விளையாட முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த முடிவுகளுக்காக நான் வருத்தப்பட மாட்டேன். மீண்டும் அணிக்கு திரும்ப நிறைய முயற்சிகளை செய்தேன். அதற்கான பயிற்சிகள் பலனளித்தன. மீண்டேன். இதோ இப்போது உற்சாகமாக மீண்டும் களம் திரும்பியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
The post ஐபிஎல் தொடரில் ஆட முடியாத விரக்தியில் இருந்து மீண்டேன்: பென் ஸ்டோக்ஸ் உற்சாகம் appeared first on Dinakaran.