×

திருவெள்ளக்குளம் ஸ்ரீநிவாசப் பெருமாள்

அரசனை ஆழ்வாராக்கிய பெருமாள்!

திவ்யதேசம் என்றாலே திருமங்கையாழ்வார் நம் நினைவில் முன்னே நிற்பார். காரணம், மிக அதிக எண்ணிக்கையில், 86 திவ்ய தேசங்களுக்கு, குதிரைப் பயணமாக விஜயம் செய்து அந்தந்தப் பெருமாள்களை கண்ணாற, உளமாற சேவித்து, அனைவருக்கும் அந்த இடத்தில் அப்படி ஒரு பேரருள் கோயில் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் பல பாசுரங்களை இயற்றிப் பேரானந்தம் அடைந்தவர். ஒரு காலத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு சிற்றரசனாகத் திகழ்ந்த அவரை, வைணவம் போற்றும் ஆழ்வாராக மாற்றிய பெருமை ஒரு பெண்ணுக்கு உண்டு.

அந்த அற்புதம் நிகழ நிலைக் களமாக அமைந்தது இந்த வெள்ளக்குளம்! வானவீதியில் தன் தோழிகளுடன் சென்ற கந்தர்வப் பெண் ஒருத்தி, இந்த வெள்ளக்குளத்தில் பூத்திருந்த மலர்களைப் பார்த்து தன் வயமிழந்தாள். உடனே கீழிறங்கினாள். மெல்ல குளத்துக்குள் இறங்கி மலர்களை மென்மையாகக் கொய்ய ஆரம்பித்தாள். உடன் வந்த தோழிகள் இவளுக்காகக் காத்திருந்து, அவள் வராததால் தாம் மட்டும் கந்தர்வ லோகம் திரும்பினர். தனித்து விடப்பட்ட இந்தப் பெண் திகைத்தாள். குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டால் அவளால் மீண்டும் தன் உலகத்துக்கு மீள முடியாது. வேறு வழியின்றி ஒரு மானிடப் பெண்ணாக இந்த திருவெள்ளக்குளம் பகுதியிலேயே அவள் தங்கிவிட்டாள். அந்த ஊர் வைத்தியர் ஒருவர் அவளைத் தன் பொறுப்பில், தன் மகளாக குமுதவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்.

சிற்றரசனான நீலன், அந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தபோது அவன் கண்வலையில் சிக்கிய குமுதவல்லி, உடனேயே அவனது மனசுக்குள்ளும் போய் அமர்ந்துகொண்டாள்! அந்தப் பெண்ணுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமர்ப்பிக்கத் தயாரானான் நீலன். ஆனால் அவளோ, வெறும் காதலுடன், கல்யாணத்துடன், குடும்ப உறவுடன் அவனது பொறுப்புகள் முடங்கிவிடக் கூடாது என்று அவனிடம் சொன்னாள். இவன் பெருமாள் பெருமையை உணர வேண்டும், போற்ற வேண்டும், பரப்ப வேண்டும்; அதற்குத் தான் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள்.

ஆகவே, திருமால் திருத்தலத்தில் மலர்ந்த அவனது காதலைத் தான் ஏற்க வேண்டுமானால், நீலன் பஞ்ச சம்ஸ்காரங்களை மேற்கொண்டு ஒரு வைணவனாக மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள். உடனே அவள் சொன்னபடி தன் உடலில் ஸ்ரீவைணவச் சின்னங்களைத் தாங்கினான். ஒவ்வொரு நாளும் அவன் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு அமுது படைத்திட வேண்டும் என்று அடுத்த கோரிக்கையை விடுத்தாள். இதற்கும் சம்மதித்தான் நீலன். தன் கஜானாவிலிருந்து செல்வங்களை வாரி இறைத்தான்.

தினமும் ஆயிரம் அடியார்களுக்கு அமுது செய்தான். விரைவில் கஜானா காலியானது. சோழ மன்னருக்குத் தான் கட்டவேண்டிய கப்பத்தையும், அன்னதானத்துக்கு செலவிட்டான் நீலன். நாளாக ஆக, அன்னதானமளிக்க ஆதாரம் இல்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்தான். எங்கே போய் பொருள் ஈட்டுவது, யாரிடம் யாசகம் கேட்பது? அப்படியே கிடைத்தாலும் அதெல்லாம் 1000 பேருக்கு தினசரி உணவிட போதுமா? அதற்குக் கொள்ளையடிப்பதுதான் ஒரே வழி! அதற்கும் துணிந்தான் நீலன்.

காட்டுப் பகுதிக்குச் சென்று வழிப்பறியில் இறங்கினான். குறிப்பிட்ட நாளன்று அவனை முற்றிலுமாக ஆட்கொள்ள நினைத்த பெருமாள், பூர்ண மகரிஷியின் மகளாக வளர்ந்துவந்த பூர்ணவல்லி என்ற திருமகளை மணந்துகொண்டு, மிகப் பெருஞ்செல்வமாக சீர்வகைகளைச் சுமந்தும், மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்தபடியும் தம்பதி சமேதராக வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்த நீலன் மகிழ்ச்சியால் துள்ளினான்.

உடனே திருமண கோஷ்டிமுன் பாய்ந்தான். கத்தி காட்டி மிரட்டினான். அவர்கள் கொண்டுவந்திருந்த எல்லா நகைகளையும், பொருட்களையும் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டினான். ஆனால், அதைத் தூக்க முயன்ற அவன் தடுமாறி விழுந்தான். அந்த மூட்டை அத்தனை கனமாகி விட்டிருந்தது. விழுந்தவன் கண்களில் மணமகன் கால்மெட்டி பட்டது. அதையும் கழற்றிக் கொடுக்குமாறு மிரட்டினான் நீலன். ஆனால், தன்னால் அதனைக் கழற்ற இயலவில்லை என்றும், முடிந்தால் அவனே கழற்றிக்கொள்ளலாம் என்றும் திருமால் தெரிவித்தார். கீழே குனிந்து திருமாலின் பாதத்தைத் தொட்டு எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு மெட்டியைக் கழற்ற முனைந்தான் நீலன்.

எவ்வளவோ முயற்சித்தும் இயலவில்லை. இறுதியாகத் தன் பற்களால் கடித்து இழுக்க முனைந்தான். அவன் உதடுகள் அந்தப் பாதத்தில் பட்ட அந்த விநாடியே பேரானந்த மின்னலால் தாக்கப்பட்டான். அது உடலின் ஒவ்வொரு அணுவிலும், ரத்த நாளங்களிலும் ஊடுருவி அவன் மேனியையே சிலிர்த்துப்போட்டது. சுயஉணர்வு பெற்று, கைக்கும், வாய்க்கும் எட்டாத அந்த மெட்டியை மட்டும் விட்டுவிட்டு, பிற நகை பொக்கிஷத்தையாவது எடுத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அந்த மூட்டையோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

எவ்வளவு முயற்சித்தும் அவனை கேலி செய்வதுபோல அது அசையாமல் கிடந்தது. கடுங்கோபம் கொண்டான் நீலன், ‘‘நானே கள்வன், என்னிடமே மாயம் செய்கிறாயா? என்ன மந்திரம் சொல்லி இந்த மூட்டையை இவ்வளவு கனக்க வைத்திருக்கிறாய்?’’ என்று வெகுண்டான். நிமிர்ந்து திருமாலைப் பார்த்தான். அவரோ, புன்னகையுடன் அவனை நெருங்கினார். ‘‘எந்த மந்திரம் என்று சொன்னால் இந்த மூட்டை லேசாகிறதோ இல்லையோ, உன் மனசு லேசாகிவிடும். அதில் கனத்துக்கொண்டிருக்கும் மாசுகள் நீங்கிவிடும்,’’ என்று சொல்லி அவன் காதருகே தன் பவளவாயைக் கொண்டு சென்றார். திருமந்திரம் ஓதினார். காது வழியே புகுந்த அந்த மந்திரச்சொல் அவன் உள்ளத்தை அப்படியே உருக்கியது.

திடுக்கிட்ட அவன், தன்முன் சங்கு சக்ரதாரியாக திருமால் நெடிது நின்றிருந்ததைக் கண்டான். அவ்வளவுதான், கரகரவென்று கண்கள் நீர் சொரிய, மளமளவென்று உதடுகள் பாசுரத்தை உதிர்த்தன:

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துய ரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேனோடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!

‘ஓர் இளம்பெண்ணிடம் காணும் சுகமே உலகத்தின் பேரானந்தம் என்று நினைத்து இதுநாள்வரை ஏமாந்து போனேனே! பகவானே, உன் திருநாமம் உலக இன்பங்களுக்கெல்லாம் எவ்வளவோ மேன்மையானது என்பதை இப்போதுதானே உணர்கிறேன்!’ என்று ஆனந்தக் கூத்தாடினான் நீலன். இவ்வாறு பாசுரம் பாடிய அவன், அக்கணத்திலிருந்தே “திருமங்கை ஆழ்வார்’’ ஆனார். குமுதவல்லியால் ஈர்க்கப்பட்டு அவளாலேயே திருமாலின் கருணையை நேரடியாகப் பெற்றவர் என்பதால், அந்த மங்கை உருவாக்கியவராதலால், திருமங்கை ஆழ்வார்! வெள்ளக்குளம் திருத்தலத்தின் பொய்கைக் கரையில் ஆஞ்சநேயர் சிறு சந்நதி கொண்டிருக்கிறார்.

துவஜஸ்தம்பத்தின் கீழ் கருடாழ்வார் காட்சியளிக்கிறார். கருவறையில் ஸ்ரீதேவி – பூமிதேவி சமேதராக அண்ணன் பெருமாள் கம்பீரமாக நின்றிருக்கிறார். இவர் ஏன் அண்ணன் பெருமாள் எனப்படுகிறார்? இதற்கும் திருமங்கையாழ்வாரே காரணம். திருமங்கையாழ்வாராகப் புதுப் பொலிவு கொண்ட நீலன், ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்று அந்தந்தப் பெருமாள்களைத் தரிசித்து மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தார். அந்தவகையில் திருமலை சென்று மலையப்ப சுவாமியாகிய ஸ்ரீநிவாசனைக் கண்ணுற்று,

கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன்
திண்ணாகம் பிளக்கச் சரஞ்செலவுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
அண்ணா, அடியேன் இடரைக் களையாயே

– என்று பாடி மகிழ்ந்தார்.

‘கடல் சூழ்ந்த இலங்கையில் அதர்மத்தை அழித்து விண்ணோர் தொழுதேத்தும் வேங்கட மாமலையானே, அண்ணா, அடியேன் என் துயரைத் துடைப்பாயாக’ என்ற பொருளில் பாடி வணங்கினார். அதே திருமங்கையாழ்வார் சுமார் 30 திவ்ய தேசங்களை தரிசித்துவிட்டு வெள்ளக்குளம் வந்தபோது, அவருக்குப் பழைய நினைவுகள் மனதில் அலை மோதியிருக்கும் போலிருக்கிறது. இப்படிப் பாடுகிறார்:

கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா, அடியேன் இடரைக் களையாயே

‘அகன்ற கடல்போன்ற கரியநிறம் கொண்ட பெருமாளே, போர்க்களத்தில் பகைவர்களை வெற்றிகொள்ளும் மறையோதிய பெருமக்கள் நிறைந்திருக்கும் திருநாங்கூரில், உயர்ந்த மதில்கள் சூழப்பெற்ற திருவெள்ளக்குளம் என்ற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் அண்ணா, அடியேன் என் துயரைத் துடைப்பாயாக’ என்ற பொருளில் பாடி இன்புறுகிறார். இரண்டு பாடல்களிலும் ‘கண்ணார் கடல்..’ என்று ஆரம்பித்து, ‘அண்ணா, அடியேன் இடரைக் களையாயே..’ என்று முடித்திருக்கிறார்.

வேங்கடவனை ‘அண்ணா’ என்று அழைத்த ஆழ்வார், அதே வேங்கடவனே போன்ற இந்த ஸ்ரீநிவாசனை அவருக்கும் அண்ணா என்றழைத்து அவருக்கு இவரை மூத்தவராக்குகிறார். இதனாலேயே இந்தத் திருவெள்ளக்குளம் திருமலைக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. அண்ணன் குடிகொண்டிருக்கும் கோயில் என்பதால், இது அண்ணன் கோயில் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. திருமலையில் பெருமாள் ஸ்ரீநிவாசனாகவும், தாயார் அலர்மேல்மங்கைத் தாயாராகவும் விளங்குவது போலவே திருவெள்ளக்குளத்திலும் அதே பெயர்களில் இந்தப் பெருமாளும், தாயாரும் திகழ்கிறார்கள்.

திருமலையைப் போலவே இங்கும் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதமே நடைபெறுகிறது. திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தனித்து கொலுவிருக்க, தாயார் கீழே திருச்சானூரில் தரிசனம் தருகிறார். ஆனால், வெள்ளக்குளத்தில் இருவரும் அருகருகே தனித்தனி சந்நதிகளில் சேவை சாதிக்கிறார்கள். தாயார் கோயில் கொண்டிருக்கும் பிராகாரத்தில் 108 திவ்ய தேசப் பெருமாள்களும் தனித்தனி ஓவியமாக அழகுற காட்சியளிக்கிறார்கள்.

தாயாரின் புன்முறுவலில் தான் எத்தனை கருணை! குமுத வல்லித் தாயாருக்கும் தனி சந்நதி உள்ளது. மிகப் பெரிய சாதனை புரிந்தும், மலராத குமுத மொட்டுபோல அடக்கமாகப் புன்னகைக்கிறார் இந்தத் தாயார். பிள்ளைப் பேறளிக்கும் புனித தலம் இது. இங்கு வேண்டிக் கொண்டால் தடைகள் உடனே விலகி திருமணங்கள் எளிதாக நடந்தேறுகின்றன. ஆயுள் விருத்தியையும் அருளும் அற்புத தலம்.

வெள்ளக்குளமும், திருமலையும் ஒரே பெருமாளைக் கொண்டிருப்பதால், திருமலை வேங்கடவனுக்கு மேற்கொள்ளும் பிரார்த்தனைகளை, வெள்ளக்குளத்தில் நிறைவேற்றலாம் என்றும், ஆனால், இங்கே நேர்ந்துகொண்டவற்றை இங்குதான் நிறைவேற்ற வேண்டும்; திருமலையில் அல்ல என்றும் கூறுகிறார்கள். சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது அண்ணன்கோவில். காலை 7.30 முதல் 11.30 மணிவரையிலும், மாலை 4 முதல் 8 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும்.

கோயில் தொடர்புக்கு: 04364 266534.

தொகுப்பு: பிரபு சங்கர்

The post திருவெள்ளக்குளம் ஸ்ரீநிவாசப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallakkulam Srinivasap Perumal Perumal ,Divyadesam ,Thiruvallakulam Srinivasap Perumal ,
× RELATED பெருமாள் கோயில்களுக்கு ஒரு நாள்...