சிவகங்கை: சிவகங்கை தொல்நடை குழு ஒருங்கிணைப்பில், தொல்நடை பயணமாக தொல்லியல் களங்களை பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிட்டனர். சிவகங்கை தொல்நடை குழு, தொன்மை மரபு சார்ந்த செய்திகளை புதிதாக கண்டுபிடித்து அடையாளப்படுத்தல், ஆவணப்படுத்துதல், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே தொன்மை மரபுகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தொல்லியல் இடங்களை பார்வையிட தொல்நடை பயணத்தை அவ்வப்போது நடத்தி வருகிறது. சிவகங்கை தொல்நடைக்குழு ஒருங்கிணைப்பில் தொல்நடை 3வது பயணம் நடைபெற்றது.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பயணத்தில் பார்வையிடக்கூடிய இடங்களை கையேடாக சிவகங்கை தொல்நடை குழு தலைவர் சுந்தரராஜன் வெளியிட ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இளங்கோ பெற்று கொண்டார். தொடர்ந்து சிவகங்கை அருகே சித்தாலங்குடி மகாராஜா கோயில், மதுரை மாவட்டம் வரிச்சூர் குன்னத்தூர் குடைவரைகள், சமணப்படுக்கைகள், தமிழி எழுத்து ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து கீழடி அருங்காட்சியகம், திறந்த நிலையில் உள்ள ஏழாம் கட்ட அகழாய்வுத்தளம், தூதை வட்டெழுத்து கல்வெட்டுடைய நடுகல், உலக புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டு கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் காளிராசா கூறுகையில், இந்த பயணத்தில் தொன்மையும் மரபும் சார்ந்த செய்தியை அறிந்து அதை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை தொல்நடைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் காளையார்கோவில் நாட்டிய பள்ளி திருக்கான பேரூரார் கலைக்களஞ்சிய மாணவர்கள் தொல்நடை பயணத்தில் கலந்து கொண்டனர். பயண ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடை குழு செயலர் நரசிம்மன், பொருளாளர் பிரபாகரன், துணை தலைவர் முனீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர் என்றார்.
The post சிவகங்கை தொல்நடை குழுவினர் மரபு சார்ந்த இடங்களுக்கு பயணம் appeared first on Dinakaran.
