×

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக்கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள்பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில்தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

வழி: சென்னை – திருச்சி மார்க்கத்தில் ‘ஸ்ரீரங்கம்’ ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி பெரிய பெருமாளையும், பெரிய பிராட்டியாரையும் சேவித்த பின்னர், பெரிய பிராட்டியார் சந்நதி அருகிலேயே எழுந்தருளியுள்ள மேட்டழகிய சிங்கரைச் சேவிக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர்மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத்தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் நரசிம்ம தீர்த்தம் இத்திருத்தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றிமலை கோயில்களை சேவித்துவிட்டு தேவர்மலை கதிர்நரசிங்கப் பெருமாளைச் சேவித்துவிடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருதஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப்பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்றுவிடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண்முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக்கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப்பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில்நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிரநரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்டமதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும்
பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை
யுரையாயே

(பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்டபாசுரத்தைப் பேசித் துதிக்கும்போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத்தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத்துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கைமடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும்போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி ரயில்/ பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

தொகுப்பு: அருள் ஜோதி – நாகலட்சுமி

The post நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Narasimha ,Thiruvarangam Periya Koil ,Mettazakhiya Singer ,
× RELATED சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம்...