×

கன்னி ராசியின் காதல்

ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22 வரை பிறந்தவர்களுக்கும் அல்லது கன்னியா ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பகுதியில் சொல்வது அதிகளவு பொருந்தி வரும். புதன் ஜாதகத்தில் வலுவாக இருந்தாலும் புதன், சுக்கிரன் சேர்க்கை சுபர் பார்வையோடு நல்ல இடத்தில் இருந்தாலும் இப் பலன்கள் அதிக அளவு பொருந்தி வரும்.

பெண் சார்பு

கன்னி மண் ராசியாகும். இந்த ராசிக்குரிய அதிபதி புதன். இதன் சின்னம் பெண். புதன் ராசிக்காரர்கள் ஆணாக இருந்தாலும் பெண்மையின் நளினத்தோடும் விளங்குவர். பெண்களைச் சார்ந்து இருப்பார்கள். அம்மா, மனைவி, சகோதரி, தோழி என்று பெண்கள் இவருடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதைக் காணலாம்.

கவர்ச்சியான பேச்சு

கன்னியா ராசிக்காரர்கள் பொதுவாக பேச்சை அதிகம் விரும்புவார்கள். எனவே, காதலிலும் காமத்திலும் இவர்கள் பேசியே அசத்தி விடுவார்கள். பேசியே கவிழ்த்து விடுவார்கள். பேசியே கொன்று தின்று விடுவார்கள். இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பாலினர் அடிமைப் படுவது சகஜம்.

நேரடிப் பேச்சு

கன்னியாராசியினர் எதையும் சூசகமாக தெரிவிப்பதைக் காட்டிலும் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர்கள். நான் உன்னை காதலிக்கிறேன்! நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் ‘இது நல்லா இருந்தது’ ‘அது நல்லா இருந்தது’ என்றும் கூறுவர். எதுவாக இருந்தாலும் நேரடியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற விருப்பம் கன்னியா ராசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு.

இசை இன்பம்

எப்போதும் தங்களைச் சுற்றி ஓர் இசை தன் இனிமையை பரப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எந்த வேலை செய்தாலும் பாட்டு கேட்டுக்கொண்டே செய்கின்ற இவர்களின் படுக்கை அறையிலும் பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கும். இவர்கள் நறுமண விரும்பிகள். வத்தி, பூ, சென்ட், வேறு பல வாசனைத் திரவியங்கள் இவர்கள் காதலிக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.

பாராட்டு முக்கியம்

கன்னியா ராசிக்காரர்களை காதலிக்கும் ஆண்களும் பெண்களும் கலா ரசனையுடன் செயல்பட வேண்டும். அவர்களுடைய கண், மூக்கு, உதடு, உடை, செருப்பு, தலை அலங்காரம், உடை உடுத்தியிருக்கும் பாங்கு, உடுப்பின் நிறம், தரம் என இவற்றை கண்டு ரசித்து ஒவ்வொன்றையும் பாராட்ட வேண்டும். அவர்களிடம் காணப்படும் மாற்றம் அல்லது புதுமை எதுவாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டிப் பாராட்டி மகிழ வேண்டும். அவர்களையும் மகிழ்விக்க வேண்டும்.

பூ ஒரு புயலானது

முதலில் பெண்மைக்குரிய நாணத்தோடும் நளினத்தோடும் பழகும் இவர்கள் சிறிது காலம் கழிந்ததும் அசுரத்தனமான வேகத்துடன் செயல்படுவார்கள். வெளியே அடக்கமும் பணிவும் உடையவர்களாகத் தெரியும் இவர்கள் காதல் காமம் போன்றவற்றில் ஈடுபடும் போது முற்றிலும் மாறாக நடந்து கொள்வது உண்டு. அவரா இவர் என்ற சந்தேகம் எழும் வகையில் பெண்களும் ஆண்களும் ஆபாசமாகப் பேசுவார்கள் நடந்து கொள்வார்கள்.

கதை சொல்லி

காதலிப்பது என்று முடிவு செய்து விட்டால் கன்னியா ராசி பெண் தன் காதலனுடன் நீண்ட நேரம் பேசுவதை விரும்புவாள். மணிக்கணக்கில் பேசுவாள். அவருடைய பேச்சைப் பொறுமையாக கேட்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் போகப் போக சிலருக்கு வெறுப்பாக இருக்கும். அப்போது அவள் தன் பேச்சைக் கேட்கும் ஒருவரை நாடுவாளே தவிர வாயை மூடி மௌனியாக இருக்க மாட்டாள். கன்னி ராசி ஆண்களும் இதே போலத்தான் நிறைய பேசுவார்கள். எந்த சம்பவத்தையும் அழகாகக் கதைபோல் சொல்வார்கள். அதைப் பொறுமையாகக் கேட்டு ரசிக்கக்கூடிய பெண்கள் கன்னி ராசி ஆண்களை காதலிக்கலாம்.

உயரத்தை நோக்கி

வேலை வெட்டி இருந்தாலும் கடுமையான பணிச் சுமைக்கும் இடையே காதலுக்காக நேரம் ஒதுக்குவார்கள். காதலை மதிப்பார்கள். போற்றுவார்கள். ஆழமாக நேசிப்பார்கள். பொழுதுபோக்குக்காக இவர்கள் காதலிப்பது கிடையாது. தன் காதலரின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அவருக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கி அவரை உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவது என்ற குறிக்கோளுடன் கன்னியா ராசி ஆண்களும் பெண்களும் செயல்படுவர்.

முன் யோசனை அதிகம்

ஆரம்பத்தில் வெகு நிதானமாக பல மாதங்கள் யோசித்து பல வழிகளிலும் ஆராய்ந்து இந்த பெண் அல்லது இந்த ஆண் தன்னுடைய வாழ்வின் கடைசி வரை தனக்கு உறுதுணையாக ஊன்றுகோலாக தூண்டுகோலாக இருப்பாரா என்பதை நன்கு ஆராய்ந்து முடிவு செய்து கொண்ட பின்பு தான் காதலை வெளிப் படுத்துவர்.

காதல் குடும்பம்

கன்னியாராசியினர் தம் காதலை வெளிப்படுத்திய பிறகு வேறு மனிதராக மாறிவிடுவார். அதுவரை நீங்கள் பார்த்த ஆள் வேறு இப்போது இனி நீங்கள் பார்க்கப் போகும் ஆள் வேறாக இருக்கும். பெரும்பாலும் கன்னியா ராசிக்காரருக்கு காதலிக்கும் காலம் என்று ஒன்று இருப்பது கிடையாது. காதலிக்கலாமா என்று யோசிக்கும் காலம் முடிந்து காதலைத் தெரிவித்த அடுத்த நொடியே அவர்கள் கணவன் மனைவியாக வாழத் தொடங்கி விடுவார்கள். அதன் பிறகு அவர்களின் வாழ்வில் உரிமையும் கடமையும் தென்படுமே தவிர ஜாலியான மகிழ்ச்சியான காதல் இருப்பது கிடையாது. அவர்கள் சந்திப்பு நிகழும் ஒவ்வொரு சமயமும் அது வெளியூரில் வேலை பார்க்கின்ற அல்லது தனித்தனியே வெவ்வேறு வீடுகளில் வசிக்கின்ற ஒரு கணவன் மனைவி சந்திப்பு போலவே விளங்கும்.

ரகசியம் ‘நோ’

கன்னியா ராசிக்காரர்கள் எதையும் தன் துணையிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்கள். தன்னுடைய ஜோடிக்கு தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தானும் அனைத்தும் தெரிந்து கொள்ள உரிமை உடையவர் என்றும் உரிமை கோருவார்கள். இவர்களுக்குள் ரகசியம் இருக்கக் கூடாது என்பது இவர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் நடைமுறைக்கு அது ஒத்து வராது. இதனால் பிரிவினை வரக்கூடும். தன்னுடைய துணையும் தன்னைப் போலவே நுண்ணறிவு உடையவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

ஒரே குடும்பம்

கன்னியாராசி பெண் காதலிக்கத் தொடங்கியதும் தன் காதலரின் வீட்டுக்கு வந்து அவர் வீட்டில் இருக்கும் வேலைகளை எல்லாம் இழுத்து போட்டுச் செய்வார். வீட்டு மனிதர்களோடு அன்பாகவும் பாசமாகவும் பழகுவார். ஆனால் தன் காதலருடன் ஒரு பத்து நிமிடம் கூட தனியாகக் கொஞ்சிப் பேச மாட்டார். அவரைப் பொறுத்தவரை காதல் என்பது முடிவானவுடன் திருமணமும் முடிந்து விட்டது. இனி அவரவர் கடமைகளை அவரவர் ஒழுங்காக நேர்த்தியாக முழுமையாக செய்ய வேண்டும் அவ்வளவுதான். காதல் எல்லாம் அதன் பிறகு படுக்கையறையில் மட்டுமே. அங்கு அவர் ஒரு விசித்திர விஸ்வரூபம் எடுத்து தன் காதலரை/ கணவரை முழுமையாக ஆட்கொள்ளுவர். பகலில் பார்த்தவரா இப்போது இரவில் பார்ப்பது என்று ஐயமும் அச்சமும் தோன்றும். மொத்தத்தில் கன்னியா ராசியினரின் காதலும் காமமும் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து அமைதியும் ஆர்ப்பரிப்பும்
கொண்டிருக்கும்.

முனைவர்
செ.ராஜேஸ்வரி

The post கன்னி ராசியின் காதல் appeared first on Dinakaran.

Tags : Mercury ,Venus ,Virgo ,
× RELATED துலாம் ராசியினர் குணத்தில் அமைதி, செயலில் வேகம்!