×

மூட்டுவலியைப் போக்கும் பயிற்சி

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடலில் சுமாராக 600 – க்கும் மேற்பட்ட தசைகள் அமைந்துள்ளன. பொதுவாக தசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் தசைகள் உறுதுணையாக இருக்கின்றன.

மனிதன் உடம்பு முழுவதும் தசைகள் அமைந்து நம் உடலுக்கு ஒரு அழகான வடிவமைப்பைத் தருகிறது. தசைகளும் அது செய்யும் வேலைக்கேற்ப அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதாவது; நம் இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் நம் இருதயத்தை சுற்றி அமைந்துள்ள தசைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதே. நாம் நடப்பதற்கு, சாப்பிட, ஓட, நடக்க என்று நம்அனைத்து வேலைகளுக்கும் நம் தசைகள் இயக்கம் மிக முக்கியம்.

நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் உடல் சோர்வடைகிறோம் சில நேரங்களில். அதே போல் நாம் தொடர்ந்து இயங்கும் போது, நம் தசைகளும் தசை நார்களும் சோர்வடைகிறது. இதனை ஆங்கிலத்தில் fatigue என்று கூறுவார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இங்கே நாம் முன் தொடை தசைக்கும் மூட்டுவலிக்கும் என்ன உறவு என்று பார்க்கலாம்.

முன் தொடையில் அமைந்துள்ள தசையை quadriceps என்று கூறுவார்கள். இது மொத்தம் நான்கு தசைகளால் ஆனது, அதனால் தான் இதனை quadri என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர். உடலில் உள்ள பல்வேறு வலுவான தசைகளில் இதுவும் ஒன்று. இந்தத் தசை மிகுந்த வலுவுடன் இருந்தால் நமக்கு பிற்காலத்தில் வரப்போகும் மூட்டுவலியை அறவே தவிர்க்கலாம்.

மூட்டுவழியைத் தவிர்க்கும் முறைகள்

நீங்கள் நடக்கும் போது பல்வேறு விசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று புவிஈர்ப்பு விசை. இந்த விசை நம் உடலில் இயங்கவில்லை என்றால் நாம் ஆகாயத்தில் மிதந்து கொண்டு இருப்போம். இந்த விசை பல்வேறு வகையில் மனிதனுக்கு உதவினாலும் சில சமயங்களில் பிரச்னையையும் ஏற்படுத்துகின்றன. அதாவது, நாம் நடக்கும் போது, நம் முழங்கால் மூட்டு முன்னும் பின்னும் இயங்கி, நம் உடலை முன்னே கொண்டு செல்ல உதவுகின்றன.

தொடை எலும்பும் கெண்டைக்கால் எலும்பும் மடங்கி விரிவதை கட்டுப்படுத்தும் தசைதான் நம் முன் தொடையில் அமைந்துள்ள quadriceps. நாம் நடக்கும் போதும், ஓடும் போதும், நிற்கும் போதும் மூட்டுகளுக்கு உள்ளே ஏற்படும் உராய்வை மிக நேர்த்தியாக கட்டுப்படுத்தும் இந்தத் தசையை நாம் ஒழுங்காகக் கவனிப்பதில்லை. 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் நாம் மிதிவண்டி மிதித்துக் கொண்டிருந்தது இந்த தசைகள் வலுவாக இருக்க உதவியது.

இந்த அவசர உலகில் நாம் எவரும் மிதிவண்டி மிதிக்கத் தயாராக இல்லை. இது போன்ற உடற்பயிற்சிகள் மிகுந்த வேலையை நாம் அறவே தவிர்த்து விட்ட சூழ்நிலையில் மூட்டுத் தேய்மானம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இந்தத் தசை வலுவை இழந்து தொய்வடையும் போது மூட்டு தேய்மானமாகத் தொடங்குகிறது. நாம் நடக்கும் போது, தரையில் இருந்து மூட்டுக்கு பரவும் உராய்வு இந்த தசைகள் மூட்டுக்குள் பரவாமல் தாங்கி பிடித்து மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கிறது.

முன் தொடைத் தசை வலுவிழக்கும் போது மிக அதிகமான விசைகள் மூட்டுக்களை தாக்கத் தொடங்கும். இதனால் மூட்டு எலும்புகள் சிறிது சிறிதாகத் தேயத் தொடங்குகின்றன. இதனைப் பொதுவாக மருத்துவர்கள் மூட்டுத் தேய்மானம் ஆகிவிட்டது, இனி ஒன்றும் பண்ண முடியாது என்று கூறுவார்கள்.ஆனால் நாம் இதனைத் தடுக்க முடியும், ஒரே வழி தகுந்த சக்தியுடன் அதாவது போதிய வலுவுடன் முன்தொடைத் தசையை வைத்து இருந்தால் நாம் இந்த மூட்டு வலியை தவிர்க்கலாம்.

தொகுப்பு : லயா

இதைச் செய்யுங்கள்!

முதலில் நீங்கள் தரையிலோ அல்லது படுக்கையிலோ கால் நீட்டியவாக்கில் அமர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் முழங்கால் மூட்டுக்கு பின்புறம் உங்கள் உள்ளங்கை முஷ்டி அளவுக்கு துண்டை (துணி) மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு உங்கள் முழங்கால் தசையை இறுக்கி, உங்கள் முழங்காலைக் கீழ் நோக்கி அதாவது காலுக்கு அடியில் உள்ள துண்டை அழுத்துங்கள்.நீங்கள் துண்டை அழுத்தும் போது உங்கள் முன்தொடை தசை இறுகுவதை நீங்கள் உணர முடியும்.

இறுக்கிப் பிடித்து ஒன்றில் இருந்து பதினைத்து வரை எண்ணிக் கொண்டு பிறகு மெதுவாக இறுக்கத்தைத் தளர்த்துங்கள்.இதே போல் தொடர்ந்து இருபது முறை காலையிலும்,மாலையிலும் செய்து வாருங்கள்.உங்கள் மூட்டுவலி மெல்ல குறைவதை நிச்சயமாக உணர முடியும்.

The post மூட்டுவலியைப் போக்கும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!