சென்னை: உயர்கல்வி பயில உதவுவதாக முதலமைச்சர் உறுதியளித்தார் என பிளஸ் 2 தேர்வில் அனைத்து படங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினி கூறியுள்ளார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி பிளஸ் 2 பொது தேர்வில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகம், கணக்குபதிவில், கணினிபயன்பாடு என அனைத்து பாடங்களிலும் சதம் அடித்து 600க்கு 600மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
சாதனை மாணவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது உயர்கல்வி பயில உதவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததாக மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். கஷ்டப்பட்டு படித்ததாலேயே இந்த அளவுக்கு சாதனை செய்ய முடிந்ததாகவும், முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியம் என்றும் மாணவி நந்தினி கூறினார்.
மாணவியுடனான சந்திப்பு குறித்த விடியோவை டிவீட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிய குடும்ப பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்று கூறியுள்ளார். அவரது உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்து தரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து என்பதை உணர்ந்து படித்த மாணவி நந்தினியை கண்டு பெருமை அடைவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும் டி.ஜி.பி.சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து திண்டுக்கல் மாணவி நந்தினி வாழ்த்து பெற்றுள்ளார்.
The post மாணவி உயர்கல்விக்கு தேவையான உதவிகளை அரசே செய்யும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!! appeared first on Dinakaran.